ஏலேய்!

விலைரூ.40

ஆசிரியர் : வே.இராம சாமி

வெளியீடு: மதி நிலையம்

பகுதி: கவிதைகள்

Rating

பிடித்தவை
மதி நிலையம், 4 (39), தணிகாசலம் ரோடு, தி.நகர், சென்னை17. (பக்கம்: 96. விலை: ரூ.40).

இளைஞர்கள் தமிழுக்குச் சேவை செய்ய, கவிதை நயத்தை வாழையடி வாழையாக வளர்த்திட, வந்து கொண்டிருக்கின்றனர் என்பதற்கு அத்தாட்சி இந்த நூல். வயதில் வளர்ந்து விட்டவர்களிடமிருந்து, கவிதை இளைஞர்கள் கைகளுக்கு இன்னும் மெருகேறி வந்திருப்பதற்கும் ஒரு உதாரணம்!

"ஏலேய்' என்னும் இந்தக் கவிதைத் தொகுப்பில் பல சிறந்த கவிதைகள் உள்ளன. எரிமலை போல பிழம்பை பீய்ச்சிக் கொண்டு வந்தாலும், தன் கவித்துவத்தால் கட்டுப்படுத்திய எண்ணங்களை, அவற்றின் வேகம் குறையாது, இகழ்ச்சியும் வெறுப்பும் இன்றி கொடுத்திருப்பது இந்தத் தொகுப்பின் ஒரு தனிச் சிறப்பு.

கோவை ஞானி, தமது முன்மொழியில் சொல்வது போல, கவிதைகளில் பாலைத்திணை தெரிகிறது. பாலைத்திணையிலும் அன்பு உண்டு உணர்வு உண்டு என்பதை நிலை நிறுத்துகிறார்.

"பம்பரம்' என்ற சிறிய கவிதை, ஒரு நூறு பக்க விஷயத்தை அடக்கமாகக் கூறுகிறது. பஸ்சில் ஏற முடியாதவனின் மன நிலையை மற்ற எல்லா நிலைகளிலும் செய்ய முடியாதவனின் மன நிலைக்கு ஒப்பிடலாம். இந்தக் கவிதையை ஆனந்த விகடன் முத்திரைக் கவிதைப் போட்டியில் சிறந்ததாகத் தேர்ந்தெடுத்ததில் வியப்பில்லை!

"சொல்லுங்கள் தேநீரகத்தில் ஊரில் மழை பெய்த செய்தி படித்து அழாமல் இருக்க முடியுமா?' நான் கடற்படையில் சேர்ந்திருந்த நேரத்தில் இதே மாதிரி வேறு ஒரு காரணத்திற்காக கண்ணீர் விட்டிருந்ததால் என்னால் இவ்வரியைப் பூரணமாக அனுபவிக்க முடிந்தது.

இன்றைய நிலைக்குப் பொருத்தமாக இருக்கிறது. "இந்தியக் கிரிக்கெட்டையுங்கூட பெய்ந்தும் கெடுக்கிறது. பெய்யாமலும் கெடுக்கிறது மழை'! இவ்வரிகளுக்குச் சமமாக உள்ளன "எண்ணெய் பிறப்பே காணாத தலையுடன் அபிநயம் பிடிக்கிறார்கள் சர்வதேச ஆட்டக்காரன் போஸ்' என்ற வரிகளும், ஏக்கம் தெரிந்தாலும் ஏமாற்றம் இல்லை!

தலைப்புக் கவிதையான "ஏலேய்' கவனிக்க வேண்டியது, சொல்லைப் பற்றி இவர் சொல்வது, பெரிய கவிஞர்கள், சொல்லைப் பற்றி எழுதிய கவிதைகள் எல்லாம் தாண்டி அண்டத்தை எல்லாம் தன்னுள் அடக்கியிருப்பது போலத் தோன்றுகிறது! "ஒலிக்கும் ஓரோர் கணத்திலும் ஒரு சொல் அன்பின் கர்ப்பம் தரிக்கிறது' இவ்வரிகள் சிறந்த சொல் நயமும் ஆழ்ந்த அர்த்தமும் கொண்டு, நம்மை ஒரு நிமிடம் சிந்திக்க வைக்கின்றன.

"ஒப்பாச்சி ஒப்பு சென்னால் விலா எலும்பு வேகாமலே எந்திரிச்சு நிற்கும் சவம்' ஒரு சவால் போலுள்ளது இந்தக் கவிதை!

வறுமையிலும், ஏழ்மையிலும், நம்பிக்கையிலும் நல்ல எண்ணங்களும் மடிந்து விடுவதில்லை என்பதற்கு இந்நூல் ஒரு உதாரணம். சாதாரண தமிழில், புரியும் படியான நல்ல கவிதைகளை இயற்ற முடியும் என்பதையும், விளம்பரமின்றி பல நல்ல தமிழ் கவிஞர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர் என்பதையும் வயதில் சிறியவராயினும் நினைப்பதில் பெரியவர்களாக இருக்கலாம் என்பதையும் ராமசாமி வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார். தமிழ் கூறும் நல்லுலகம் வரவேற்க வேண்டிய நூல். நேர்த்தியான முறையில் சிறந்த ஓவியங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள நூல். பதிப்பித்தவரும் பாராட்டப்பட வேண்டியவர்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us