வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17).
அமரர் கல்கியின் எழுத்துக்கள் மகத்தானவை. இன்றும் என்றும் தமிழ் வாசகர்களிடையே கல்கியின் எழுத்துக்கு இருக்கும் மதிப்பும் வரவேற்பும் தனித் தன்மை வாய்ந்தது. அது காலந்தோறும் கூடிக் கொண்டே வரும் சிறப்பை அனைவரும் அறிவர். இதை உணர்ந்துதானோ என்னவோ வானதி பதிப்பகம் கல்கியின் கதைகள் அல்லாத எழுத்துக்கள் அனைத்தையும் சுப்ர.பாலன் மூலம் தொகுத்து வரிசையாக வெளியிட்டு வருகிறது. "படித்தேன்... ரசித்தேன்' நூலில் கல்கி எழுதிய முன்னுரைகள், மதிப்புரைகள் இருபது தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளன. பீ.ஸ்ரீ., ஆர்.கே.நாராயணன், சாவி, கு.அழகிரிசாமி, விந்தன் போன்ற அக்கால எழுத்துப் பிரபலங்கள் பலரின் நூல்களுக்கான முன்னுரை என்பதால், அவர்களைப் பற்றியும் அவர்களின் படைப்புகள் பற்றியும் நாம் கல்கி மூலமாகப் பல விவரங்களை அறிய முடிகிறது.
"பெண் தெய்வங்கள்' நூல் கற்பும் காதலும், திருப்பித் தாக்குங்கள், கல்யாணம், அவலட்சணப் போட்டி என எட்டு தலைப்புகளிலான கல்கியின் கட்டுரைகள் இதில் உள்ளன. கற்பு, பெண்ணுரிமை போன்ற சமூக நோக்கிலான ஆழமான அலசல்களை கல்கியின் எழுத்துக்களில் தரிசிக்க முடிகிறது.
இன்றைக்கும் சிந்திக்க வைக்கும் இந்த எழுத்துக்களை கல்கி முக்கால் நூற்றாண்டு காலத்திற்கு முன்னால் எழுதியுள்ளார் என்பதை உணரும்போது நமக்கு பிரமிப்பு தட்டுகிறது. படித்தும் ரசிக்கலாம், பாடமாக ஏற்றும் நம் சிந்தையை வளப்படுத்தலாம்.