கங்கை புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 212. விலை: ரூ.70).
நாதஸ்வர வித்வான் வாசிக்கும்போது, அவரது நாயனத்தில் வரிசையாக, மின்னிக் கொண்டே தொங்கும் தங்க டாலர்களைப் பார்த்தால், அவரது வாசிப்பு மேலும் ஒரு படி உயர்வாகவே தெரியும். அதுபோல், அண்மையில் எட்டு ஆண்டுகளில் எழுத்தாளராக அறிமுகமான பரமக்குடி பா.உஷாராணி பல்வேறு இதழ்களில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுகதை 12 இந்த நூலில் இழையோடுகிறது.
பல்வேறு சமூக அவலங்களுக்கு நடுவே தெரியும் மனித நேய ஒளிப்புள்ளிகள், இவரது சிறுகதைகளில் கோலமாக அழகு செய்கின்றன. `சும்மாதான்' என்ற சிறுகதையில் வரும் குடும்பத் தலைவி, நம்மை நிமிர வைத்து விடுகிறார்.`அன்னபூரணியாகவும் பொம்பிளைங்க இருக்கணும், ஆவேச காளியாகவும் இருக்கணும். பணிஞ்சு போகலாம், ஆனா குனிஞ்சு போயிடக் கூடாது அது மகா கேவலம்' என்ற வாழ்வியல் உண்மை படிப்பவரை நிமிர்த்துகிறது.
சிந்தனைக்குரிய சிறுகதைகள்! மனித நேயம் மணக்கும் சந்தனக் குழம்பு!