தலித்தியல் : தொகுப்பாசிரியர்கள்: இராம.குருநாதன், பத்மாவதி விவேகானந்தன். வெளியீடு: கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 160)
பிறப்பைக் காரணம் காட்டி பெண்ணும், தலித்தும் அடிமையாக்கப்பட்டதையும், அதிலிருந்து அவர்கள் விடுதலை பெற்று முன்னேறும் வழிமுறைகளையும், ஒன்பது ஆய்வுக் கட்டுரைகள், ஒப்புமை, ஆதாரங்களோடு இந்நூல் ஆவணப்படுத்தியுள்ளது.
கடந்த 1984ல் "மனுஷி' என்ற பெண் விடுதலை இதழும், "தமிழன்' இதழும், "பறையன்' என்ற இதழும், இதன் வழி ரெட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசர் போன்றோரது எழுத்துக்கள், ஒடுக்கப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டின. "நிறப்பிரிகை,' கோடாங்கி' போன்ற தலித் இதழ்கள், தலித்துகளின் அவலங்கள், போராட்டங்களை உலகின் பார்வைக்குக் கொண்டு வந்தன.
மேல்தட்டு மக்களையே சுற்றி வந்த சிறுகதை, புதின இலக்கியங்கள், புதுமைப் பித்தன் வருகைக்குப் பின் கீழ்த்தட்டு மக்களையும் காண வைத்தன. தலித் பெண்கள் அனுபவிக்கும் பாலுறவு வன்கொடுமைகள், போலி வழக்குகள் போன்றவற்றையும் திருநாளைப் போவார் புராணத்தில் உள்ள ஜாதிப் பின்னணி, சேக்கிழார் பெரியபுராணத்தில் திணிக்கும் ஜாதி முறைகளையும் இந்நூல் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இருட்டில் இருப்பவரை, வெளிச்சத்தைக் காட்டி அழைத்துச் செல்லும் ஆய்வு நூல் இது!