விலைரூ.130
புத்தகங்கள்
கம்பன் காட்டும் கண்ணுதலான்
விலைரூ.130
ஆசிரியர் : பழ. பழனியப்பன்
வெளியீடு: வானதி பதிப்பகம்
பகுதி: முத்தமிழ்
Rating
23, தீன தயாளுதெரு, தி.நகர், சென்னை-17.
(பக்கம்: 296)
கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு என்று பாரதியாரால் புகழப்பட்ட, கம்பனின் காவியத்தைப் போற்றாதவர்களே கிடையாது என்று கூறலாம். சைவ - வைணவ பேதமின்றி, அந்நூல் திகழ்வதும் ஒரு காரணம். "கம்பநாட்டாழ்வார் என வைணவர்கள் போற்றும் கம்பர் தம்நூலில், 478 பாடல்களில் சிவனையும் சிறப்பாகப் பாடியுள்ளார் என்று கூறுவதே இந்நூலின் கருத்தாகும்.
கம்பன், தன் தலைவனை ராமனைப் பற்றிப் பாடும் பொழுதெல்லாம், ராமன் மும்மூர்த்திகளின் இயல்பும், வலிமையும் ஒரு சேரப்பெற்றவன் என்றும், மும்மூர்த்திகளுக்கும் மேம்பட்டவன் என்றும் கூறிச் செல்வதை, பல இடங்களில் காணலாம் இதையெல்லாம், இந்நூலில் தொகுத்து வழங்கியுள்ளார் உரையாசிரியர்.
"தாளுடை என்று துவங்கும் பாடலின் விரிவுரையில் "வாளேர் உழவர் என்ற சொல்லை விளக்குவதும் (பக்கம்20), "நீதியாய் என்று துவங்கும் பாடலில், "வேதிய என்ற சொல்லாட்சியை, பின்னர் கும்பகருணன் ராமபிரானை அதே சொல்லாட்சியால் அழைப்பதைச் சுட்டிக் காட்டுவது (பக்கம் 32) உட்பட பல அரிய சிறப்பு விளக்கங்கள் உள்ளன.
முரு. பழ.ரத்தினம் செட்டியாரின், "கம்பன் உணர்த்தும் பரம்பொருள் நிலை என்ற நூலில் விளக்காத பல பாடல்களையும் இந்நூலில் காண்பது, சிவனடியார்களுக்கும் பெரிதும் இன்பமளிக்கும் என்று கூறலாம்.
சிவனின், 116 பெயர்களை, கைலாச நிகண்டு என்ற நூல் வழியாகத் தெரிவிப்பதும், சிவன் குறித்த பாடல்களை, கம்ப ராமயணத்தில் யார் யார் பேசுகின்றனர் என்று அட்டவணைப்படுத்துவதும் நூலிற்கு மேலும் அழகு சேர்க்கின்றன.பிழையில்லாத நல்ல அச்சில் வந்துள்ள மிகவும் பயனுள்ள - அருமையான நூல்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய