அங்கம் ஒன்றுக்கு நான்கு காட்சிகளாக நான்கு அங்கங்களைக் கொண்ட ‘மதுரை அரசி’ என்னும் இப்புதுக்கவிதை நாடக நூல், கி.பி.1812ல் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த ரோஸ் பீட்டர் வாழ்வில் நடந்த வரலாற்று உண்மையை மையப்படுத்தி தடாதகை என்ற மதுரை மீனாட்சியின் வரலாற்றை முழுமையாக விவரிக்கிறது.
பல்வேறு புராணச் செய்திகள் உடன் மாலிக்காப்பூர் படையெடுப்பு, குமாரகம்பணனின் மதுரை வருகை, மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் அரங்கேற்றம் போன்ற பல்வேறு வரலாற்றுச் செய்திகள் சிதைவின்றி இந்நாடகத்தில் எடுத்தாளப்பட்டுள்ளன.
சிறப்பாக, ‘மாலிக்காபூர் படையெடுப்புக்கு பின், அந்த நாசங்களை, அடக்க விஜயநகர மன்னர் குமாரகம்பணர் புறப்பட்டு, மதுரைக் கோவிலை மீட்ட செய்தியை வரலாற்றுக் காவியமான ‘மதுரா விஜயம்’ வழியில் அப்படியே கூறப்பட்டிருப்பது நேர்த்தியாகும்.
மூன்று என்ற எண்ணின் சிறப்பு, யானையின் மறுபெயர்கள், விரத முறைகள், விழாக்கள், இலக்கிய நினைவூட்டல் போன்ற சமூகத்தோடு தொடர்புடைய பல கருத்துகள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன. மொத்தத்தில் வரலாறு, ஆன்மிகம், இலக்கிய ஆளுமை, மொழி ஆளுமை, கவித்துவ நேர்த்தி போன்ற பல்வேறு சிறப்புக் கூறுகளை வெளிப்படுத்தும் எளிய புதுக்கவிதை நாடகம் தான் ‘மதுரை அரசி’.
ந.ஆவுடையப்பன்