நடிகை ஷகிலாவின் சுயசரிதையை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அந்த நூலிலிருந்து ஒரு பகுதி...
என்னை நோக்கி கேட்கப்பட்ட கூர் அம்புக் கேள்விகளும் நான் செக்சி இமேஜுக்கு மாறிக்கொண்டிருக்கிறேன் என்கிற பேச்சுகளும், அதிகமாகி வருவதை நான் அறிந்தேன். வேண்டுமென்றே செக்சியாக நடிப்பதாகவும், மீடியாவில் அதிக கவனம் பெறுவதற்காக அப்படி நடிப்பதாகவும் புகார்கள் எழுந்தன.
இல்லாததும் பொல்லாததுமான கதைகளைக் கட்டவிழ்த்துவிட நிறையபேர் தயாராக இருந்தார்கள். முதலிலெல்லாம் அதைக் கேட்கும்போது மிகவும் வேதனையாக இருந்தது. போகப்போக அதையெல்லாம் நான் பொருட்படுத்துவதேயில்லை. எதற்காக இப்படியெல்லாம் கதைகளைப் பரப்புகிறார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.
சமீபத்தில் வெளிவந்த ‘பில்லா’ படத்தில் நயன்தாரா ‘டூ பீஸ்’ உடையில் வந்தார். அதில் யாருக்கும் செக்ஸ் கண்ணுக்குத் தெரிவதில்லை. மலையாளத்தில் பிரபல நடிகைகளில் எத்தனை பேர் கவர்ச்சியான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். அது யாருக்கும் தவறாகத் தெரியவில்லை.
இந்திய சினிமாவில் மிக அதிகமாக உடம்பைக் காட்டுகின்ற இந்தி நடிகைகளையும் யாரும் செக்ஸ் நடிகை என்று சொல்வதில்லை. யாருக்கும் அவர்களைப் பற்றி எந்தப் புகாரும் இல்லை. நான் நடித்தால் மட்டும் செக்சி என்கிறார்கள். எதற்காக என்னை மட்டும் அந்த ரகத்தில் சேர்க்கிறார்கள் என்பதற்கு இப்போதும் எனக்குப் பதில் கிடைக்கவில்லை.
நானும் நடிக்கத்தான் செய்கிறேன். கதாபாத்திரத்துக்குப் பொருத்தமான உடை அணிந்து நடிக்கிறேன். வெறும் நடிப்பு மட்டுமே. செய்கிற வேலையை முழு மனதுடன் ஆத்மார்த்தமாய் செய்கிறேன். இதில் செக்ஸ் காண்பவரின் மனதில்தான் அழுக்கு இருக்கிறது.
நான் நடித்த ‘சாப்ட் போர்ன்’ சினிமாக்களில் ஒரு எல்லைக்கு அப்பால் கிளாமர் காட்சிகள் இருப்பதில்லையே. பிறகு ஏன், அந்த சினிமாக்களையெல்லாம் ரசித்துப் பார்த்து விட்டு, பிறகு, ஷகிலா என்ற பெண்ணை செக்ஸ் நடிகை என்று முத்திரை குத்தி வேட்டையாட வேண்டும்?