இந்தச் சின்னஞ்சிறு நாவல் நம்மை உருவாக்கிவிடுகிறது; உலுக்கி விடுகிறது. அம்மாவிடம் மகன் வைத்துள்ள உயர்ந்த அன்பைச் சொல்லும் உன்னதப் படைப்பு இது!
‘அம்மாவுக்கு இப்ப கேன்சர் ரொம்ப அட்வான்ஸ்டு ஸ்டேஜ்ல இருக்கு... அதிகபட்சம் இன்னும் மூணு மாசம் தான். குணப்படுத்துற கட்டத்தை அவங்க தாண்டிட்டாங்க’ என்கிறார் டாக்டர்.
தாயின் மரணத் தேதியை முன்கூட்டியே அறிந்து, வாழ்வதை விட ஒரு மகனுக்கு வேறு என்ன கொடுமை வாழ்வில் நேர்ந்துவிடும் என்று மகன் அழுகிறான்.
அம்மாவுக்கு கால்களில் நீர் கோர்க்க ஆரம்பித்தது. கால்கள் வீங்கியதால் எழுந்து நிற்கவே அவளுக்கு முடியாமல் போனது. கழிப்பறையில் கூட ஒருவர் துணைக்கு நிற்க வேண்டிய அவலத்திற்கு ஆளானாள்.
படுக்கையிலே கிடந்ததால், ‘படுக்கைப் புண்’ வந்து அவளை வதைத்தது. படுக்கவும் முடியாமல், எழுந்து நடக்கவும் முடியாமல் அவள் அனுபவித்தவை
துயரத்தின் உச்சம்!
மகளின் திருமணம், தந்தையின் மருத்துவ செலவினங்கள், குடும்பத்தின் பொருளாதார ஏற்றம், என எங்கள் குடும்பத்தின் அத்துணை காரியங்களையும் தனி ஒருத்தியாய் நடத்திக் காட்டியவள் என் அன்னை!
ஒரு ஆணாதிக்க சமூகத்தில் எத்தனையோ இடையூறுகளுக்கு மத்தியில், எந்தவித பக்கப் பலமும் இன்றி அவள் தன் வாழ்வில் கண்டுள்ள ஏற்றங்கள் எல்லாம் சாதாரணமானவை அல்ல. அதற்குப் பின்னால் அவளது அளப்பரிய உழைப்பும், தனித்துவம் வாய்ந்த ஆளுமையும், ஆகப் பெரும் தியாங்களும் நிறைந்திருந்தன! அப்படிப்பட்ட ஒரு கம்பீரமான வாழ்வுக்கு அந்தத் தாய் சொந்தக்காரி.
மகன், மருத்துவமனையில் தாய்க்கு இரவு – பகலாகச் சேவை செய்கிறான். நோய் கொடுமையால் தாய், கடைசியில் மரித்துப் போகிறாள்.
கண்ணீர்த் துளி வர உள்ளத்தை உருக்குகிறார், கதாசிரியர் அண்டோ கால்பட்.
– எஸ்.குரு