அம்ருதா பதிப்பகம், 5, ஐந்தாம் தெரு, சக்தி நகர், எஸ்.எஸ்.அவென்யு, போரூர், சென்னை - 600 116. போன்: 044- 2252 2277. (பக்: 176)
வேலைக்குப் போகும் பெண்கள் அல்லது உழைக்கும் பெண்கள் என்ற பிரிவைப் பற்றி திலகவதி எழுதிய நாவல் இது. இன்று கல்வி, பணி, பலதுறை ஈடுபாடு, அரிய சாதனைகள் ஆகியவை பெண்களுக்கு அயலாக இல்லை. ஆனாலும், கண்ணாடிக் கூரைகள் திறமை சான்ற பெண்களின் நியாயமான உயர்வை இன்று வரை தடுத்துக் கொண்டே இருக்கின்றன.பெண் தன் வாழ்வை, கல்வியை, பணியை மேற்கொள்வதற்கான முன்பின் சூழல்கள், அதற்காக கூறப்படும் காரணங்கள் (இன்று வரை) சரியானவையாக இல்லை. அவரவர் வாழ்நிலைக்கு ஏற்றவாறு பாலியல் தொல்லைகள், அவமானங்கள், வேதனைகள், வேலைப்பளு, நொறுக்கப்படும் கனவுகள், முடக்கப்படும் சுதந்திரம் என்று நீள்கிறது. அவர்கள் அன்றாடம் சந்திக்கும் இன்னல்களின் பட்டியல். இந்தச் சூழ்நிலையில் வெவ்வேறு வாழ்நிலைகள், குடும்பச் சூழல், சமூக அந்தஸ்து, பணிப்பிரிவுடைய பெண்கள் குழு ஒரு ஆயுத பூஜைக்கும் மறு ஆயுதபூஜைக்கும் இடைப்பட்ட ஆண்டில் தங்கள் தனி வாழ்விலும் பணியிடத்திலும் சந்திக்கும் நிகழ்வுகளை இந்நாவல் கலைநயத்துடன் சொல்கிறது. சிந்தனையைத் தூண்டக்கூடிய படைப்பு இது.