மாதவ முத்ரா, 12, எம்.வி.நாயுடு தெரு, சேத்துப்பட்டு, சென்னை.600 031. தொலைபேசி: 28360874. (பக்கம் 144)
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் இரண்டாவது தலைவர் ஸ்ரீ குருஜி. சொல்லும் செயலும் இணைந்த தலைவராக வழிகாட்டி அந்த அமைப்பைப் பெரிதாக வளர்த்தவர். அதேபோல இன்றைய பா.ஜ., வின் முன்னோடியான ஜனசங்கம், பாரதிய மஸ்தூர் சங்கம், விஸ்வ இந்து பரிஷத் என்று பல்வேறு இயக்கங்கள் உருவாக்கக் காரணமானவர். இன்று "சங்கபரிவார்' என்று அழைக்கப்படும் இந்த இயக்கத்தலைவர்களிடம் உள்ள கருத்து வேறுபாடுகள் வேறு விஷயம்.
அவரது நூற்றாண்டு விழாவை ஒட்டி இந்த நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்த அத்தலைவர் தமிழகத்திற்கு வந்த போது நிகழ்ந்த சில செய்திகள் இதில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், ஜி.டி.நாயுடு ஆகியோருடன் இருந்த அவரது நிழற்படங்களும் இதில் அடக்கம்.
இப்புத்தகத்தில் அவரது எளிமை, மற்றும் கூர்த்த அறிவு பற்றிய சில தகவல்கள் இருப்பதுடன் அவர் தமிழக அன்பர்களுக்கு எழுதிய கடிதங்களும் உள்ளன. அதில் , "தமிழ் வளமான மொழி: நமது கலாசார தலைமுறையின் அரும் பொக்கிஷம் அதன் இலக்கியத்தில் இருக்கிறது' என்ற தகவலைக் (பக்கம் 115 ) காணலாம்.
எளிமை, தூய்மை, அதே நேரத்தில் தேசத்தை நேசித்துச் செயல்பட்டதில் முன்னோடியாக வழிகாட்டிய அவர் மறைந்தபோது பார்லிமென்ட்டில் அஞ்சலி செலுத்தினார் இந்திரா காந்தி என்பது வரலாறு.
ஆனால், இப்புத்தகத்தில் அவரது சிறப்புகள் பற்றிய வரலாற்றுக் கருத்துக்கள் கொண்ட சிறப்புத் தகவல்கள் சேர்க்கப்படக் காணோம். ஒட்டுமொத்தமாக ஸ்வயம் சேவகர்கள் என்ற அடைமொழியுடன் சேகரிக்கப்பட்ட தகவல் இருக்கிறதே தவிர, சமூகத்தில் அவர்களுக்குத் தனிப்பட்ட அந்தஸ்து என்ன என்ற விவரம் சரியாக இல்லாததும் தகவல்களின் திண்மையை ஒளி மங்கச் செய்து விடுகிறது. இதையடுத்த பதிப்பில் மாற்றுவார்கள் என நம்பலாம்.