பொதிகை மலைக்கு அந்த பெயர் வந்தது ஏன் எனும் கேள்வியை எழுப்பி நம்மை சிந்திக்க வைக்கிறார், நூலாசிரியர். பொதியப்பட்ட இடம் போல் தோற்றம் அளிப்பதால், அதை பொதிகை மலை என்று, கால்டுவெல் கூறுகிறார். பவுத்த இலக்கியங்களில் பொதிகை மலை, ‘போதல கிரி’ எனப்படுகிறது என்று குறிப்பிட்டு, பொதிகை மலைக்கும், பவுத்தத்திற்கும் உள்ள தொடர்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பொதிகை மலையில் தமிழ் பிறந்ததாகப் போற்றுகிறோம். அதன் அர்த்தம் என்ன? மலை, உயர்வின் அடையாளம். தமிழ் மொழியின் உயர்வை அடையாளப்படுத்துவதற்கு, பொதிகை மலை குறிக்கப்படுகிறது என்கிறார், நூலாசிரியர்.
‘பவுத்த மதம் தமிழ்நாட்டை விட்டு அகற்றப்பட்டு, பவுத்த நூல்கள் அனைத்தும் அழிக்கப்பட்ட காலப் பகுதியில், அவலோகிதரைப் பொதிகை மலையோடு தொடர்புபடுத்தி பேசும் சான்றுகள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டன எனலாம். காலப்போக்கில் அவலோகிதர் வீற்றிருந்த இடத்தில் அகத்தியருக்கு இடந்தரப்பட்டது’ (பக். 17).
முகிலை ராசபாண்டியன்