‘ஜோதிடத்தை முழுவதும் பொய் என்று அறவே ஒதுக்கவும் முடியாது. அதேநேரம் அது நூற்றுக்கு நூறு உண்மை என்று தலையில் தூக்கி வைத்து கூத்தாடவும் முடியாது’ என்ற ஒரு நிலைமையை விளக்க, ஆசிரியர் மேற்கொண்ட முயற்சியே இந்த நூல்.
ஜோதிடவியல் எங்கே தோன்றியது, யார் இதைத் தோற்றுவித்தது. அது தோன்றிய காலம் எது என்பனவற்றை உறுதியாகக் கூற முடியாது. ஜோதிடத்தின் தோற்றமும், வளர்ச்சியும், ஜோதிடத்தின் வகைகள், இந்திய மேனாட்டு ஜோதிட முறைகள், ஜோதிடமும் அறிவியலும், ஜோதிடமும் மருத்துவமும் என்று ஏழு தலைப்புகளில் மிக விரிவாக, நூலாசிரியர் அலசியிருக்கிறார்.
இன்றைய நிலையில் ஜோதிடக் கல்வி என்பது, ஜோதிட அறிவியலாக மாற்றம் பெற்றுள்ளது. எனினும் சில ஜோதிடர்களின் கணிப்புப் பிழை, மூல நூல்களைச் சரியாக உள்வாங்காமை, புரிதலில் ஏற்படும் பிழைகள் உள்ளிட்ட காரணங்களால், ஜோதிடம் இன்று பல கேள்விகளைச் சந்திக்க வேண்டிய தருணத்தில், வெளிவந்துள்ள இந்த நூல் வரவேற்கப்படத்தக்கது.
ஏனெனில், இதில் வரலாற்று தொகுப்பும் இருக்கிறது; விவாத தொகுப்பும் இருக்கிறது. தமிழக அரசின் பாராட்டும், பரிசும் பெற்றுள்ள இந்த ஆய்வு நூல், ஜோதிடவியல் பயிலும் மாணவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி.
மயிலை சிவா