கடந்த, 1946ம் ஆண்டு, இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்றதும், ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டதும், பின், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டதும், இந்திய கலாசாரத்தை உலகிற்கு உணர்த்தியதுமான, ஹெர்மான் ஹெஸ் எழுதிய, ‘சித்தார்த்தா’வை தமிழில் மொழி பெயர்த்துத் தந்துள்ளார் சுரானந்தா.
வெறும் மொழிபெயர்ப்பு நூலாக மட்டும் படைக்காமல், ஓர் ஆய்வு நூலாகவும் மாற்றி ஆங்காங்கே தான் படித்தது, கேட்டது ஆகியவற்றையும் தந்திருப்பது கூடுதல் சிறப்பு. அந்தணர் குலத்தில் பிறந்த சித்தார்த்தன், தன் ஆன்ம சாந்திக்காக நடத்தும் தேடுதல்களும், அது தொடர்பான உரையாடல்களும் நம்மைக் கவர்கின்றன. உடலின் வயதிற்கேற்ப, அனுபவங்களைப் பொறுத்து மாறும் மனநிலை, தத்துவார்த்தங்களுடன் விவரிக்கப்பட்டுள்ளது.
முனிவரைத் தேடிப்போன ஒருவர், ‘முனிவரே! நீங்கள் எப்படி அமைதியாக இருக்கிறீர்கள். எனக்கோ அனைத்து வசதிகளும் இருந்தும் மன அமைதி இல்லையே’ என்றார். அதற்கு முனிவர், ‘நான் உண்ணும்போது உண்ணுகிறேன், உறங்கும்போது உறங்குகிறேன்’ என்றார். (பக். 52) தத்துவ கருத்துக்களை பிரசார நெடி இல்லாமல் முன்வைத்த விதம் வரவேற்பிற்குரியது.
– ஸ்ரீநிவாஸ் பிரபு