பீஷ்மர்... பிறக்கும்போது தேவவிருதன்; வாழும்போது பீஷ்மர்; இறக்கும்போது பிதாமகர்.
அவர் ஒரு தனிமனிதரல்ல; சத்தியத்தின் சாம்ராஜ்யம். மனித வாழ்வு குறித்து, மனித கற்பனைக்கு அப்பாற்பட்ட உணர்ச்சி நிலைகளிலும், உலகியல் எல்லைகளையும் அளந்து, வாழ்ந்து அவற்றை தனக்குள் வசப்படுத்திய பேராற்றல்.
மகாபாரதத்தின் முதுகெலும்பு. மானுட வாழ்வின் விசித்திரம்; அழியா சித்திரம்.
மகாபாரத இதிகாசத்தின் முதலும் முடிவும் தெரியாதவர்கள்; பீஷ்மரை முழுதும் தெரிந்தால் போதும்.
இந்தப் புத்தகம் அந்தக் கடமையை மிகச்சரியாக செய்கிறது. பீஷ்மரின் மொத்த வாழ்வையும், சுத்த யதார்த்தத்தோடு நமக்கு காட்சிப்படுத்துகிறது.
பீஷ்மரின் பிறப்பே பெரும் ரகசியத்துடன் தான் தொடங்குகிறது. ஒரு அதிசயத்தின் வாழ்வு ரகசியத்துடன் தொடங்குவதில் எந்த வியப்பும் இல்லை தானே...
அரச குலத்தின் வாரிசாகப் பிறந்து, காட்டிலும் மலையிலும் வளர்ந்து, நதிக்கரையில் முதல் முறையாக தந்தையை பார்த்து, அவருக்காக தன் வாழ்வின் மொத்த சுகத்தையும் இழந்து, பேரரசனாக இருந்தும் இல்லாமலும் ஆட்சி செய்து, கடைசி மூச்சு வரை சத்தியத்தையே சுவாசித்து, தர்மத்தையே உண்டு, நேர்மையையே உடுத்தி, மனித வாழ்வின் அளக்க முடியா ஆச்சரியமாகவே வாழ்ந்திருக்கிறார் பீஷ்மர்.
ஒரு குழந்தைக்கு தன் தந்தையின் பெயர் தெரிந்திருக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் ஒரு இந்தியனுக்கு மகாபாரதம் தெரிய வேண்டியது. அதிலும், பீஷ்மரின் வழியாக பாரதத்தை தெரிந்து கொள்ளும்போது மிக சுவாரஸ்யமாகவும், எளிமையாகவும் இருக்கிறது.
பாகுபலி படத்தின் இரண்டே பாகத்தை பார்த்து பிரம்மித்து போய்க்கிடக்கும் நமக்கு, அதன், 10 பாகத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்... அப்படி இருக்கிறது, ‘பீஷ்மர்!’
–வெற்றி