பெரும்பாலான பத்திரிகைகளில், ‘வாசகர்களின் கேள்வி, அதற்கான ஆசிரியரின் பதில்கள்’ பகுதி இடம் பெறுவது வழக்கமாக உள்ளது. ஒவ்வொரு ஆசிரியரும் அவருக்கான தனிப் பாணியில் பதிலளிப்பார்.
ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் பணியாற்றி, பயணப்பட்டு, தன்னைத் தானேஆராய்ச்சி செய்து அனுபவம் பெற்று வரும், வெ.இறையன்பு, வாசகர் கேள்வி – ஆசிரியர் பதில் பாணியிலிருந்து விலகி, தானே கேள்விகள் எழுதி, அதற்கு, தானே பதிலும் அளித்துள்ளார்.
‘ராணி’ வார இதழில் வெளியான இந்தக் கேள்வி – பதில் பகுதியை தொகுத்து, சமீபத்தில் அவர் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.
‘இறையன்பு எழுதும் புத்தகங்கள் அனைத்தும், அறிவுக் களஞ்சியமாக இருக்கும்’ எனச் சொல்லிக் கேள்விப்பட்டுள்ளேன். என் அனுபவத்தில், ‘மூளைக்குள் சுற்றுலா’ புத்தகம்; மிகப் பெரிய சான்று.
அந்த வரிசையில், ‘நமக்குள் சில கேள்விகள்’ புத்தகமும் ஒன்று. நமக்குள் நிறைய கேள்விகள் எழும்; அதற்கான பதிலை யோசிக்கத் தோன்றாது; படித்தறியவும் சோம்பல்படுவோம்.
ஆனால், கேள்விகள் மட்டும், திரும்பத் திரும்பத் தோன்றியபடியே இருக்கும். இந்தக் கேள்விகளுக்கு, இறையன்பின் புத்தகத்தில் பதில் கிடைக்கும்.
‘முட்டாள் எனத் திட்டினால், எப்படி சகித்துக் கொள்வது, பொது வாழ்க்கையில் தனி மனித ஒழுக்கம் தேவையா, கடல் ஏன் வற்றுவதே இல்லை, நிறைய ஆண்டுகள் வாழ வழி என்ன, யாரைப் பார்த்து அதிக வருத்தம் ஏற்படும், முடிவு எடுப்பதில் கெட்டிக்காரர்கள் ஆண்களா பெண்களா’ போன்ற சீரியஸ் கேள்விகள் இதில் உள்ளன; அதற்கான சீரியஸ் பதில்களும் உள்ளன.
‘முடி கறுகறுவென இருக்க என்ன செய்ய வேண்டும், எதில் குறுக்கு வழி நல்லது’ என்பன உட்பட பல கேள்விகளுக்கு, சிரிப்பு வரவழைக்கும் பதிலைச் சொல்லி இருக்கிறார்.
இதைத் தாண்டி, பல பதில்கள், மிக மிகச் சிறப்பாக அமைந்துள்ளன. ‘வயதாகும்போது மூளையின் செயல்பாடு குறையுமா, வாழ்க்கையில் மிகவும் சிரமமானது எது, அடிக்கடி சிலர் சத்தியம் செய்வது ஏன்’ ஆகியவை, உதாரணங்கள்.
படித்துப் பாருங்கள்; நல்ல நுால்!
– பா.மீனாகுமாரி