வைணவ சமயத்தில் சமுதாயப் புரட்சி செய்த ராமானுஜர் புனித வரலாற்றை, மரபுக் கவிதையால் வடிக்கப்பட்ட நுால். பிறந்த இடம் திருப்பெரும்புதுார்; கற்ற இடம் காஞ்சிபுரம்; முத்தி பெற்றது திருவரங்கம் என்பதால் மூன்று காண்டங்கள், 53 படலங்கள், 1,108 விருத்தங்கள் கொண்டுள்ளது இந்த காவியம்.
ஜாதி வேற்றுமையைச் சாடி, தீண்டாமையை வேண்டாமெனக் கூறியதை அழகுறப் பாடியுள்ளார். திருக்கோட்டியூருக்கு பல முறை நடந்து சென்று, நம்பி உரைத்த அட்டாட்சர மந்திரத்தை, கோபுரத்தின் உச்சியில் ஏறி தைரியமாய் சொன்னதை அழகுறப் பாடியுள்ளார்.
அணி நயம், கற்பனை காவியக் கூறுகள் நிறைந்துள்ளன. திருவரங்கம் சேர்ந்ததும், ‘உடையவர்’ என்னும் பட்டம் வந்ததை பாடுகிறார். ராமானுஜரின் காவியம், கவியால் வரைந்த சிறந்த ஓவியம்.
– முனைவர் மா.கி.ரமணன்