முகப்பு » ஆன்மிகம் » அருட்பிரகாச வள்ளலாரின் அருட்சிந்தனைகள்

அருட்பிரகாச வள்ளலாரின் அருட்சிந்தனைகள்

விலைரூ.100

ஆசிரியர் : மு. விவேகானந்தன்

வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
இந்த நுால், அருட்பாவை அறிந்து கொள்வதற்கான அருமையான ஆவணம் என்றால் மிகையாகாது. இந்நுாலில் காணக் கிடைக்கும் செய்திகளும், அரிய தகவல்களும், நுாலாசிரியரின் எளிமையான விளக்கங்களால் பெருமை பெற்றுள்ளன.
சுருக்கமாகவும், அதேசமயம் ஆழமாகவும் வள்ளலார் சிந்தனைகளை அரிதின் முயன்று கட்டுரையாக்கி உள்ளதைப் பாராட்ட வேண்டும்.
அருட்பாவை எத்தகைய கோணங்களில் காண வேண்டும் என்பதை நுட்பமாகப் பதிவு செய்துள்ளார் ஆசிரியர். அருட்பாவின் சிறப்புகளைத் தொகுத்துள்ள திறம் போற்றுதற்குரியது.
சன்மார்க்கத்தின் கொள்கைகளை எளிமையாகத் தொகுத்துக் காட்டும் நுாலாசிரியர், சத்திய தருமச்சாலை, சத்திய ஞான சபை அமைப்பு முறை பற்றிய தகவல்களை விரிவாகவும், மனம் கொள்ளும் வண்ணமும் தந்துள்ளார்.
ஒப்பீட்டுக் கட்டுரைகளாக, வள்ளுவரும்  வள்ளலாரும், வள்ளலாரும் பாரதியாரும் ஆகிய இரண்டும் நுாலாசிரியரின் ஒப்பீட்டு ஆய்வைத் தக்கவாறு உணர்த்தும்.
திருக்குறள் அரங்கேறியபோது, எதிர்ப்புக்கிடையே சங்கப் பலகை அந்நுாலைக் காப்பாற்றியது போல, அருட்பா வெளியிட்டபோது, பல மருட்பா வாதங்கள் எதிர்நிலையில் தோன்றியதென்றாலும், நீதி தேவதை, திருவருட்பாவை உயரிய திருமுறைகளாக உலகுக்குத் தந்தது என்று கருத்துரைத்திருப்பது, ஆசிரியரின் ஒப்பியல் சிந்தனைக்கு நல்ல சான்று.
இந்நுால் படைத்த இருவருமே தமிழ்ப் பண்பாட்டின் கண்கள் என்று சொல்லியிருப்பது பாராட்டத்தக்கது.
வள்ளலாரும், பாரதியாரும் ஒரு கோட்டில் உலா வருவதை, ஒன்றே தெய்வம், ஜோதி வழிபாடு, ஜாதி, சமய சீர்திருத்தம், மரணமில்லாப் பெருவாழ்வு ஆகிய துணைத் தலைப்புகளில் நன்கு படம் பிடித்து காட்டுகிறார் நுாலாசிரியர்.
மரணமில்லாப் பெருவாழ்வை இந்நுாலாசிரியர் நோக்கியுள்ள விதம் அருமையானது. மாணிக்க வாசகப் பெருமான் பெற்ற மரணமில்லாப் பெருவாழ்வானது, அவரது ஆன்மாவை நிலை பெறச் செய்ததே தவிர, தேகத்தை நிலை பெறச் செய்யவில்லை.
நம் வள்ளல் பெருமான் பெற்ற சாகா வரமானது, மேலான அவரது ஆன்மாவையும், தேகத்தையும் நிலைபெறச் செய்து விட்டது என்று நுாலாசிரியர் இக்கட்டுரையின் இறுதியில் குறித்திருப்பது சிந்திக்கத்தக்கது.
நுாலில் இறுதிப் பகுதிகள் வள்ளலாரை  அறிந்து கொள்ள நின்று உதவும். வள்ளலார் அன்பர்களுக்கு மட்டுமின்றி, அறநெஞ்சுடையோர் அனைவரும் போற்றிப் புகழும்படியான நுாலாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.
ராம. குருநாதன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us