கோவன் பதிப்பகம், 72, எம்.ஜி.ஆர்., சாலை, நங்கநல்லூர், சென்னை-600 061. (பக்கம்: 104)
இராமயணத் தொடர்பு இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகிறது. சிறிய மலைகள் பெரும்பாலும் மருந்துவாழ் மலை, சஞ்சீவி மலை என்று இராமாயணத்துடன் இணைத்து அழைக்கப்படுகின்றன. இராமாயண மாந்தர்களில் ராமன், சீதை, இலக்குவன், அனுமன், ராவணன் முதலானோர் முதன்மை நிலையில் போற்றப்படுகின்றனர்.கிட்கிந்தாக் காண்டத்தில் மட்டும் இடம் பெறுபவன் வாலி. வலிமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவன் இந்த வாலி. வாலியின் வால் செல்லாத இடத்தில் தான் ராவணனது ஆட்சி எல்லை அமைந்திருக்கிறது என்று கம்பர் தெரிவித்திருப்பதன் வாயிலாக வாலியின் வீரத்தைத் தெரிந்து கொள்ள முடியும். அரக்கர்களைப் போரிட்டு அழிக்கும் ஆற்றல் கொண்டவன் வாலி. தேவர்களாலும் அசுரர்களாலும் கடைந்தெடுக்க முடியாத அமிர்தத்தைக் கடைந்து எடுக்கும் அளவிற்கு வலிமை கொண்டவன் வாலி. வாலிக்கு வீடு பேறு ராமனால் கிடைக்கிறது. அந்த நிலையிலும் தனது வாதத் திறமையாலும் அறிவுக்கூர்மையாலும் ராமனைப் பேச்சற்றவன் ஆக்குகிறான் வாலி. இந்தச் சிறப்புக்கள் கொண்ட வாலியின் வரலாற்றை எளிய நடையில் எழுதியுள்ளார் முகிலை ராசபாண்டியன். இந்திய மொழிகளிலும் உலக மொழிகளிலும் ராமாயணம் வெளிவந்துள்ள பட்டியலைத் தந்திருப்பது நூலுக்கு மேலும் சிறப்புச் சேர்க்கிறது.