கட்டாயம் படிக்க வேண்டிய நுால். ஒரு கட்டுரைத் தலைப்பு நுாலின் பெயராக அமைந்துள்ளது. வாசகர்களின் ஆர்வத்தைத் துாண்ட இப்படிப் போட்டிருக்கலாம்.
இரட்டை பொருள் தரும் பாடல்கள் தமிழில் நிரம்ப உண்டு. அவை சிலேடை அல்லது இரட்டுறமொழிதல் எனப்படும் வகையில் அமைந்தவை.
இக்காலத்துத் திரைப்படங்களில் இரட்டை அர்த்த வசனம் என்றால், இயல்பான ஒரு பொருளும், இழிவான ஒரு பொருளும் இருக்கும். இதற்கு மூலமான தோல்பாவைக்கூத்து எனும் நாட்டுப்புற கலையே ஆகும். நாட்டார் வழக்கு பற்றி விளக்கமாகப் பல கட்டுரைகள் இதில் உள்ளன.
நாட்டுப்புறவியல் ஆய்வாளரான நுாலாசிரியர், குமரி மாவட்டக் கிராமியக் கலைகளிலும், கல்வெட்டியல், சிற்பவியல், கோவில் கலை போன்றவற்றிலும் ஆர்வமுடையவர்.
நுாலை முழுவதும் படித்தால் அவர்தம் ஆய்வுகளும், ஆர்வமும் நன்கு அறியலாகும். இலக்கியம், கல்வி பற்றியும், மகாத்மா பற்றியும் கூட கட்டுரை உண்டு.
‘நடிகைக்குக் கோவில் கட்டுகிற, -நடிகர்களுக்குப் பாலபிஷேகம் செய்கிற ரசிகர்கள் வாழ்கிற மாநிலத்தில் தான், இந்த கிராமியக் கலைஞர்களும் வாழ்கின்றனர் என்பது வேதனையானது’ என்ற ஆசிரியர் கூற்று நினைக்கத்தக்கது. ஆணவக் கொலைகள் நமக்குப் புதிதல்ல என்ற கட்டுரை, நம்மை வெகுவாகப் பாதித்து சிந்திக்க வைக்கிறது.
மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்ட மறுநாள், மதுரையில் கோட்சேயின் கொடும்பாவி எரித்து ஒப்பாரி பாடினராம்.
‘கப்பல் கரை சேர்ந்ததென்று
கரையிலே பார்த்தோமே
கப்பலைக் கவிழ்த்து விட்டான்
கொலைகாரக் கோட்சேயும்...’ என்று தொடர்கிறது அப்பாடல்.
இப்படி இந்த நுால் பற்றி நிரம்ப எழுதலாம்.
–கவிக்கோ ஞானச்செல்வன்