ஐந்தினைப் பதிப்பகம், 279, பாரதி சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-5. (பக்கம்: 268.)
டாக்டர் ஜி.யு.போப், தமிழ் மொழிக்குக் கிட்டிய அருட்கொடை. அவரது தமிழ்த் தொண்டுக்கு நிகராக வேறெதுவும் இல்லை என உறுதியுறச் சொல்லலாம். அவர் எழுதிய தமிழிலக்கணம் எனும் இந்நூலில், போப்பின் வாழ்வும், தொண்டும் பற்றிய முன்னுரை மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.
முதலில் இலக்கண வினா- விடை என ஒரு பகுதியும், இறுதியில் இலக்கண அகராதி என ஒரு பகுதியும் இருக்க, இடையில், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், சொற்றொடரதிகாரம், யாப்பதிகாரம், அணியதிகாரம், பொருளதிகாரம் என ஆறு அதிகாரங்கள் காணப்படுகின்றன. நன்னூல் இலக்கண நெறிகள் பெரிதும் எடுத்தாளப்பட்டுள்ளன. யாப்பருங்கல நூலின் செய்திகள் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. பொருளதிகாரம் என ஒரு தலைப்பு இருப்பினும், ஒரு சில சுருக்கச் செய்திகளே அதன் கண் உள.
தமிழில் உள்ள இலக்கணப் பகுதிகளுக்குத் தலைப்பில் மட்டும் ஆங்கிலச் சொற்களும் தரப்பட்டுள்ளன. போப் வாழ்ந்த காலத்து (18ம் நூற்றாண்டு) மொழி எனும் சொல் வழக்கில் இல்லை போலும். பாஷை எனும் சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது. முதலில் காணப்படும் எளிய வினா - விடைப் பகுதி அனைவருக்கும் மிகவும் பயனுடையது. தமிழ் படித்தவர்களும் தெளிவு பெறும் வகையில், நன்னூல் இலக்கணத்துச் செய்திகள் எளிய தமிழில் நூலில் தரப்பட்டுள்ளன. இறுதியில் அமைந்த அகராதியும் மிகவும் பயனுடையதே.
இந்நூல் பற்றித் திரு.வி.க., பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். இத்தமிழிலக்கண நூல் 19ம் நூற்றாண்டில் பெருவாழ்வு பெற்றிருந்தது. டாக்டர் போப் பெருமை தமிழகத்தை விதானமிட்டது. அவர் தம் இலக்கண நூல் ஒவ்வொரு மாணாக்கர் கையிலும் பொலிவதாயிற்று. யான் முதன் முதல் பயின்ற இலக்கணம் டாக்டருடையதே. இந்நூலை வாங்கிப் படித்துப் பயன் பெறுவோம்.