ஆற்றுப்படுத்தல் எனும் உளநல ஆலோசனை
மன அழுத்த பாதிப்புகளை போக்கும் வகையில் அமைந்த ஆற்றுப்படுத்தல் என்ற கவுன்சிலிங் சேவையை புரிந்து செயலாற்றும் வகையில் தெளிவு ஏற்படுத்தும் நுால். பிரபல பத்திரிகையாளர் அந்துமணியின் வாழ்த்துரையில், ‘உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உரிய மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதைப் போல, மன அழுத்தமோ, மனநல பாதிப்போ ஏற்படும் போதும் மனநல மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுதல் அவசியம்...’ என்ற வைரம் தோய்ந்த வழிகாட்டும் செய்தியுடன் அமைந்துள்ளது.ஆற்றுப்படுத்தல் கலை குறித்த செய்திகளை சொந்த அனுபவம் வாயிலாக முன்வைக்கிறது. இலங்கையில் உளவியல் கற்ற சூழ்நிலையும், அதன் பின்னணியும் சுவாரசியமாக விளக்கப்பட்டுள்ளது. வரலாற்று ரீதியாக ஆற்றுப்படுத்தல் கலை வளர்ச்சியடைந்துள்ளது தொடர்பான விபரங்களை எடுத்துக் கூறுகிறது. ஆன்மிகத்துடன் ஆற்றுப்படுத்தல் செயல்பாட்டுக்கு உள்ள தொடர்பையும், முக்கியத்துவத்தையும் புரிய வைக்கிறது. உலக அளவில் ஒவ்வொரு மதமும் ஆற்றுப்படுத்துதலை எவ்வாறு மேற்கொண்டு வருகின்றன என்பதை தெளிவுபடுத்தி விளக்குகிறது. இந்திய சூழலில் ஆற்றுப்படுத்தல் கலையின் வளர்ச்சி, அது தொடர்பாக நடந்துள்ள ஆய்வுகள், அதில் ஈடுபட்டுள்ள முக்கிய அமைப்புகள் பற்றி எடுத்துரைக்கிறது.ஆற்றுப்படுத்தும் சேவையில் ஈடுபட விரும்புவோர் வளர்த்துக்கொள்ள வேண்டிய தகுதிகள் குறித்து விரிவாக அறியத் தருகிறது. எப்படி எல்லாம் செயல்படக் கூடாது... எந்த வகை அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என விரிவாக கூறப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்டவர் மீது தீர்வை திணிக்காமல், அவரது திறமையில் நம்பிக்கை ஏற்படுத்துவதன் வழியாக மனவளத்தை மேம்படுத்த முடியும் என புதுமையாக வழி காட்டுகிறது. உளநல ஆலோசனையை நம் மண்ணுக்கு ஏற்ற விதமாக வழங்குவதற்கு, தக்க வழிகாட்டுதலை எளிய நடையில் விவரிக்கும் நுால்.– மதி




