வரலாற்றுடன் பயணித்த மாமனிதர்
விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84உலக அளவில் இந்தியாவுக்குப் பெயர் பெற்றுத் தந்த மகத்தானவர்களில், கேரள அரசியலில் ஒரு சகாப்தமாக விளக்கிய அமரர் இ.எம்.எஸ். என்கிற ஏலங்குளம் மனை சங்கரன் நம்பூதிரிப்பாடும் ஒருவர். மக்கள் பிரச்னை எதையும் வெறும் அரசியல் மற்றும் குறுகிய கண்ணோட்டத்தில் அணுகாமல், உலகளாவிய பொதுவுடைமைக் கொள்கையுடன் உரசிப் பார்த்தவர். கேரள மாநிலத்தில் தற்போதும் மாறி மாறி ஆட்சிக்கு வரும் முக்கியக் கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சி திகழக் காரணம், முதன் முதலாக உலக அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வராகப் பொறுப்பேற்ற இ.எம்.எஸ்ஸின் அரசியல் அணுகுமுறையே. மிகப்பெரிய அளவிலான தனது குடும்பச் சொத்துகளை கட்சிக்கு வழங்கிவிட்டு, அதற்காக கட்சியிலிருந்து எந்த வகையான சலுகையையும் எதிர்பார்க்காமல் கடைசி வரை ஒரு மார்க்ஸியத் தோழராகவே வாழ்ந்தவர் இ.எம்.எஸ்., அதுவும் வாடகை வீட்டில்! உலகம் முழுக்கத் தெரிந்த இந்தியப் பிரமுகர்களில் ஒருவர். கேரள மாநிலத்துக்குள்ளிருந்து செயல்பட்டாலும் அவரது பார்வை உலகம் தழுவியதாக இருந்தது. அதனாலேயே அவர் பல சந்தர்ப்பங்களில் விவாதத்துக்கு உரியவராகவும் விளங்கினார். அரசியலில் அவரைக் கண்மூடித்தனமாக எதிர்த்தவர்கள் கூட, பின்னாளில் அவரது கருத்துகளை ஏற்றுக் கொள்ள நேர்ந்தது, அவரது அரசியல் நேர்மைக்கு அடையாளம்! இ.எம்.எஸ்ஸுடன் நெருங்கிப் பழகிய அனில்குமார் ஏ.வி., மூன்று பிரிவாகப் பிரித்து இ.எம்.எஸ்ஸின் வாழ்க்கையை இந்த நூலில் அலசுகிறார். டி.கே.ரவீந்திரன் மொழிபெயர்த்துள்ளார். மிகச் சிறந்த வாழ்க்கை வரலாற்று நூலுக்கான 1996ம் ஆண்டின் கேரள சாகித்ய அகாதெமி விருது பெற்ற மலையாள நூலின் தமிழாக்கம் இந்த நூல்.