கனாக்கண்டேன் தோழி
கர்மம், ஞானம், பக்தி ஆகியன செழித்த பாரத புண்ணிய பூமியில் இறையருளைப் பெற, அவரவர்க்குத் தகுந்த வழியில் நாடுகிறார்கள். அவற்றில், குறையிலா பக்தி செய்து இறைவனை நாடுவது சிறந்தது என்பது, பக்தர்கள் பலருடைய வாழ்விலிருந்து காட்டப்படும் நல்ல வழியாக உள்ளது. வடக்கே மீராவும், தெற்கே ஆண்டாளும் இந்த பக்தியை சின்னஞ்சிறார் உள்ளத்தே வித்தெனப் பதித்த வித்தகர்களாகத் திகழ்கிறார்கள். கண்ணனிடம் நாயக & நாயகி பாவத்தில் பக்தி செலுத்திய ஆண்டாள், மீரா ஆகியோரின் பக்திபூர்வமான பாடல்களை இன்றும் பக்தர்கள் பாடுகிறார்கள். கண்ணனிடம் மையல் கொண்டு, அவனையே மணம் செய்துகொண்ட இவர்கள் இருவரும்போல், அன்னை லட்சுமியே சீதையாகவும் ருக்மிணியாகவும் அவதாரம் செய்து ஸ்ரீமந் நாராயணன் கைத்தலம் பற்றியதை நாம் ராமாயணத்திலும் மகாபாரதத்திலும் பார்க்கிறோம். இந்தத் திருக்கல்யாண வைபவங்களை இன்றளவும் மனதால் நினைத்து, பக்தர்கள் இறை மூர்த்தங்களுக்கு திருக்கல்யாண உற்சவத்தை நடத்தி அழகு பார்க்கிறார்கள். இந்த வைபவம் நிகழ்த்த வேண்டிய அவசியம் என்ன; எதற்காக இதை நடத்த வேண்டும்? போன்ற கேள்விகளுக்கு இந்த நூலில் பதிலளித்திருக்கிறார் ஸ்ரீ முக்கூர். விசுவாமித்திர மகரிஷி ஒருமுறை வீம்புக்காக ஒரு போட்டி வைத்து, அதன் மூலம் அரிச்சந்திரன் & சந்திரமதி தம்பதியை பிரித்துவைத்து அபவாதம் தேடிக் கொண்டதையும், அதற்கு பிராயச்சித்தமாக ராமனையும் சீதையையும் சந்திக்க வைத்து அவர்களது திருமணத்தை நடத்திவைத்து அழகு பார்ப்பதையும் இந்த நூலில் ஸ்ரீ முக்கூர் லக்ஷ்மிநரசிம்மாசாரியார் சுவாரஸ்யமாகச் சொல்லியுள்ளார். அதேபோல், கண்ணனை நினைத்தே உருகிக் கிடந்த ருக்மிணி, வயதான அந்தணர் ஒருவர் துணையுடன் எப்படி கண்ணனின் கரம் பற்றினாள் என்பதையும், திருமலையில் வீற்றிருந்த ஸ்ரீனிவாசன் பத்மாவதியின் கரம் பற்ற குறத்தி வேடமெடுத்து மணம் செய்து கொண்ட விதத்தையும் ஸ்ரீ முக்கூர் சொல்லியுள்ள பாங்கு ரசிக்கத்தக்கதாக அமைந்துள்ளது.மணம் செய்துகொள்வதில் அவசரம் காட்டுவதுபோல், மணமுறிவுக்கும் அவசரம் காட்டும் அவலம் புகுந்துள்ள இன்றைய காலத்தில், ஸ்ரீமுக்கூர் காட்டும் அரிய விளக்கங்கள் தம்பதிகளுக்கிடையே தோன்றும் பிரிவினை எண்ணத்தைப் போக்கும் நல்மருந்தாகத் திகழ்கின்றன.




