/ கதைகள் / தாயினும் சாலப் பரிந்து...

₹ 420

ஆன்மிகத் தேடலையும், மனித உறவுகளின் சிக்கல்களையும், உளவியல் நுட்பங்களையும் எத்தனையோ கதைகள் இதுவரை பேசியிருக்கின்றன. அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, ‘ஒரு எழுத்தாளரே தான் படைத்த கதாபாத்திரங்களை நேரில் சந்தித்தால் எப்படி இருக்கும்’ என்ற விசித்திரமான கோணத்திலிருந்து ஆன்மிகம், உறவுகள், உளவியல் ஆகியவற்றை பார்க்கிறது, தாயினும் சாலப்பரிந்து நாவல். யதார்த்தமும் கற்பனையும் ஒன்றுகின்ற ஒரு புள்ளியிலிருந்து நேர்கோடாக கதை ஜனிக்கிறது. அந்த நேர்கோடு தான் அன்பு என்று தெரியும்போது சிலிர்த்து போகிறோம். அந்தச் சிலிர்ப்பு, கதையின் கடைசி வார்த்தை வரை நீடிக்கிறது. கதையில் எத்தனை எத்தனை அன்பின் அற்புதங்கள். கதாசிரியர் எழுதிய உறவுப் பாலம் கதா பாத்திரங்களை எல்லாம் நிஜ வாழ்க்கையில் பார்க்கிறார். எழுத்தாளரிடம், ‘ஒரு வகையில் நீயும் நானும் ஒரே மாதிரியான தொழிலைத்தான் செய்கிறோம்...’ என்று பச்சை புடவைக்காரி சொல்லும்போது அதிர்ச்சி அடைகிறோம். ‘நீ உருவாக்கும் பாத்திரங்கள் உன் மனதில் உருவாகின்றனர்; உன் மனதிலேயே வாழ்கின்றனர். கதை முடிந்தவுடன் அவர்கள் விதியும் முடிந்துவிடுகிறது. அதுபோலத்தான் நான் படைக்கும் பிரபஞ்சங்களும். அவை என் மனதில் உருவாகின்றன. மனதிலேயே வாழ்ந்து, வளர்ந்து உரிய காலத்தில் அழிந்தும் விடுகின்றன...’ என்று பச்சை புடவைக்காரி விளக்கும்போது ஏற்படும் பரவசம். இது வார்த்தையில்லாத கவிதை. திருச்சியில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்து, விபத்தில் தாயை இழந்து நிலை தடுமாறி, பின்னர் அபிராமி அந்தாதி துணையோடு மீண்டெழும் அழகான உள்ளம் கொண்ட மன நல மருத்துவராக டாக்டர் சத்யா; உண்மை காதல் இப்படித்தான் இருக்கும் என்று உணர்த்தும் சாரதா-சேது தம்பதி; வஞ்சிக்கப்பட்ட பெண்ணாக, செயல் படுத்த முடியாத கோபத்தில் துடித்துக்கொண்டிருக்கும் அழகியாக, சாரதாவின் தங்கை சந்தியா; இளமையில் செய்த பாவங்கள் மனதை அழுத்த, மகள்களின் அன்பை இழந்து, நிம்மதியை இழந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தொழிலதிபர் ராமலிங்கம். இந்தக் கதை மாந்தர்களை அன்பெனும் ஒற்றைப் புள்ளியில் இணைக்கும் முக்கியமான பாத்திரமான மகாஸ்வேதா தேவியாக அந்தப் பராசக்தியே வருகிறாள். அண்ட சராசரங்களையே அடக்கியாளும் அன்பெனும் பிரவாகத்தின் உற்பத்தி ஸ்தானம் தான் பராசக்தி என்று உணரும்போது, மனம் கரைந்து போகாமல் இருந்தால் தான் ஆச்சரியம். மன நல மருத்துவத்துக்கும், ஆன்மிகத்துக்கும் இடையே மெல்லிய கோட்டில் கதை நர்த்தனமாடுகிறது. அது ருத்ர தாண்டவம் இல்லை. மனங்களை அமைதிப் படுத்தும் சக்தி தாண்டவம். காதலை வெளிப் படுத்த ஆடைகளை களைகின்றனர்; சதையை காட்டுகின்றனர்; ஆவேசமாக தழுவுகின்றனர். அடுத்த இரண்டு நிமிடங்களில் உலகமே அழியப்போவது போல் வன்முறையோடு முத்தமிடுகின்றனர். வாழ்க்கையில் சந்திப்போரை எல்லாம் பச்சை புடவைக்காரி வடிவமாக பார்க்கும் பக்குவம் வந்துவிட்டால் யார் மீதும் கோபம், எரிச்சல், மனக்கசப்பு வராது. கதை சொல்லி வைத்தியம் என்பதை ஒரு சிகிச்சை பிரிவாகவே கொண்டுவர முயற்சி செய்திருக்கிறார் கதாசிரியர். பொழுது போகவில்லையே என்று சலித்து இந்த புத்தகத்தை கையில் எடுக்காதீர். பாடம் கற்க... ஆன்மிக அனுபவம் பெற... அன்பின் தேடலில் அடுத்த நிலை அடைய, ஆர்வம் இருந்தால் இந்தப் புத்தகத்தை படியுங்கள். – சுமித்ரா தேவி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை