படைப்பாளிகளை உருவாக்கிய படைப்பாளி, இலக்கிய திறனாய்வாளர் தி.க.சி., பற்றி பல்வேறு ஆளுமைகள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். எழுத்துலகில், வாசிப்புலகில் தி.க.சி., நீக்கமற நிறைந்திருப்பதை, அவருடன் நெருங்கி பழகிய எழுத்தாளர்கள், அனுபவ கட்டுரைகளாக எழுதியிருக்கின்றனர். ‘யாருக்கும் கட்டுப்படாத இடதுசாரி இலக்கிய சிங்கம் அல்லவா அவர்’ என்கிறார், பொன்னீலன்.
தி.க.சி.,யின் மனித தொடர்புகள் அஞ்சல் அட்டைகள் மூலம் வளர்க்கப்பட்டவை. இலக்கிய இதழ்களை வாசித்து நிறைகுறைகளை அசைபோட்டு, அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்பி விடுவார். சிற்றிதழ் எழுத்தாளர்களுக்கு இதை விட வேறு என்ன அங்கீகாரம் வேண்டும்? தி.க.சி.,யின் கடிதங்கள் சிலவும் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
‘மிக்க அன்புடன் என்று கடிதத்தை முடிக்க நான் தி.க.சி.,யிடம் இருந்து கற்றேன்’ என்கிறார், அசோகமித்திரன். ‘தி.க.சி., 90’ என்ற அத்தியாயம் அவரது வாழ்வின் முக்கிய தருணங்களை ஆண்டுவாரியாக பட்டியலிட்டு உள்ளது. நூல் தொகுப்பாசிரியர், ‘தமிழ்த்தேனீ ’ இரா.மோகன் எழுதிய கட்டுரையும் முத்தாய்ப்பாய் சிறக்கிறது.
பல்வேறு விஷயங்களில் தி.க.சி.,யின் பார்வை என்ன என்பதை, அறிஞர்கள் எழுதியுள்ள கட்டுரைகளை படிப்பதன் மூலம் உணர முடிகிறது. ‘உண்மை, நடுநிலைமை, நேர்மை, விமர்சகனுக்கு அவசியம்’ என்கிறார் அவர்.