வந்தே மாதரம் ஒரு வரலாற்று கண்ணோட்டம்
உலகில் வேறு எங்கும் இல்லாத அதிசயமாக, நம் நாட்டில் மட்டும் இரண்டு பாடல்கள் தேசிய கீதங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதன் அரசியல் பின்னணி மிக விரிவானது. அதை விரிவாகவும், ஆதாரங்களுடனும் இந்நூலாசிரியர் விளக்கியுள்ளார். பல்வேறு இடங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆசிரியர் இதே தலைப்பில் பேசியவற்றின் தொகுப்பு தான் இந்நூல். "வந்தே மாதரம் பாடப்பட்ட சூழல் மற்றும் "ஜனகணமன பாடப்பட்ட சூழல் என்ன என்பதை ஆசிரியர் தெளிவாக இந்நூலில் கூறியுள்ளார். ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்காக எழுதப்பட்ட பாடல் தான் ஜனகணமன. வந்தே மாதரம் இசைக்கு பொருந்தி வரவில்லை என்ற நேருவின் கூற்று பொய். புனே நகரைச் சேர்ந்த மாஸ்டர் கிருஷ்ணாராவ் ராமச்சந்திர புலம்பிரிகர் என்பவர் வந்தே மாதரத்துக்கு அமைத்த இசை, அன்றைய இந்திய ராணுவ மற்றும் பிரிட்டிஷ் ராணுவ இசைக் குழுவினரால் ஏற்கப்பட்டது; நேரு, ராஜேந்திர பிரசாத் இவர்களால் அங்கீரிக்கப்பட்டது. ஆனால், 1950, ஜனவரி 24ம் தேதி கூடிய அரசியல் நிர்ணய சபையில், "ஜனகணமன பாடலுக்கு இணையான அந்தஸ்தை "வந்தே மாதரம் பாடல் பெறும் என்று ராஜேந்திரபிரசாத் அறிவித்தார்; "வந்தே மாதரம் பாடல் ஏற்கப்படாததற்கு காரணம் கூறப்படவில்லை. இப்படி பல உண்மையான வரலாற்றுச் சம்பவங்களை அடுக்கிச் செல்கிறார் ஆசிரியர். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., பாரதியார், காந்திஜி, நேதாஜி, திலகர், அரவிந்தர், தாகூர் போன்ற தலைவர்களால் அங்கீகரிக்கப்பட்ட "வந்தே மாதரம் என்ற பாடல், படிப்படியாக காங்கிரசால் கை கழுவப்பட்ட வேதனையான வரலாற்றை விவரிக்கிறார். "வந்தே மாதரம் வஞ்சிக்கப்பட்ட வரலாற்றின் ஒட்டுமொத்த தொகுப்பு தான் இந்நூல்.