முகப்பு » ஆன்மிகம் » பட்டினத்தாரின் தாயன்பு

பட்டினத்தாரின் தாயன்பு

விலைரூ.35

ஆசிரியர் : மா.கி. இரமணன்

வெளியீடு: பிரேமா பிரசுரம்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
பிரேமா பதிப்பகம், ப.எண்.58/1, ஆழ்வார் பேட்டை தெரு, சென்னை-18. (பக்கம்: 128)

பற்றுகளையெல்லாம் முற்றுத் துறந்து விட்ட துறவிக்கும் தாயன்பு என்பது அறுக்க முடியாத பற்று என்பது ஆசிரியரின் உள்ளக் கருத்து .அதைப் பட்டினத்தாரைச் சான்றாகக் கொண்டு ஆராய்ந்திருக்கிறார். பட்டினத்தாரைப் பற்றி ஆய்கிறவர்கள் எல்லாம் முதலில் பட்டினத்தார் எத்தனை பேர்? அவர்களில் தான் ஆராயும் பட்டினத்தார் எவர் என்று வரையறுத்துக் கொள்வது வழக்கம். இவ்வாசிரியர் 11ம் நூற்றாண்டுப் பட்டினத்தார் என்று ஒருவரையும் 15ம் நூற்றாண்டுப் பட்டினத்தார் என்று ஒருவரையும் அங்கீகரித்தாலும் இரண்டு பட்டினத்தார்களின் பாடல்களும் இரண்டறக் கலந்து மயங்கி விட்டதாலும் பட்டினத்தாரைப் பற்றி வழங்குகிற கதை ஒன்றே. ஆதலினாலும் தமது நோக்கில் பட்டினத்தார் ஒருவரே என்று கொள்கிறார்.

பட்டினத்தாரின் காலம் பற்றிப் பேசும்போது, முதல் ஏழு திருமுறைகளாகிய தேவாரம், எட்டாம் திருமுறையாகிய திருவாசகம், ஒன்பதாம் திருமுறை, பத்தாம் திருமுறையாகிய திருமந்திரம், பதினோராம் திருமுறை, பன்னிரண்டாம் திருமுறையாகிய பெரிய புராணம் ஆகிய திருமுறைகள் ஓரளவு கால வரிசைப்படியே தொகுக்கப்பட்டுள்ளன என்று போகிற போக்கில் ஒரு கருத்தை முன் வைக்கிறார் ஆசிரியர். திருமுறைகள் கால அடிப்படையில் தொகுக்கப்படவில்லை என்பதற்குக் காலத்தால் முந்திய திருமந்திரம் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டிருப்பதும் அதற்கு முந்திய திருமுருகாற்றுப்படை பதினோராம் திருமுறைக்குள் திணிக்கப்பட்டிருப்பதுமே போதுமான சான்று.

சான்றோனாக வளர்க்க வேண்டிய தந்தை இளமையிலேயே செத்துப் போனதால் தாயே பட்டினத்தாரைப் பேணி வளர்த்துச் சான்றோனாக்கினாள். அது குறித்து நெகிழ்வுணர்ச்சியினால் பட்டினத்தார் தாயின் பொருட்டு துறவையே தள்ளி வைத்தார் என்பது ஆசிரியர் கருத்து.

நூலில் பட்டினத்தாரின் கதையோடு, துறவு என்றால் என்ன என்று சொல்லப்படுகிறது. தாய்மை எது என்று பேசப்படுகிறது. பெண்மை எது என்று விவாதிக்கப்படுகிறது. இவற்றைப் பற்றி எல்லாம் பட்டினத்தார் என்ன கருத்துக் கொண்டிருந்தார் என்பதும் சொல்லப்படுகிறது. இந்தக் கருதுகோள்களை எல்லாம் மநுதர்மப் பின்னணியில் பொருத்திப் பார்க்கிறார் ஆசிரியர். மேலும் இவை ஒவ்வொன்றைப் பற்றியும் பேசும்போது சங்கப் பாடல்கள் தொட்டு அழ.வள்ளியப்பா பாடல்கள் வரை பல்வேறு மேற்கோள்கள் காட்டுகின்றார். ஆசிரியருடைய படிப்பின் பரப்பு தெரிகிறது.

கடைசியில் நூல் முடிவடைந்ததற்கான முத்தாய்ப்புகள் ஏதும் இல்லாமல் `வெந்தமைகண்டு நோதல்' என்ற துணைத் தலைப்பின் கீழ் 'முழுத்தீயில் தாயுடல் வெந்தமை கண்டு அதைக் காணப் பொறாமல் கண்ணீர் விடுகிறார்' என்ற ஒற்றை வரியுடன் நூல் சடக்கென்று முடிந்து போகிறது. படிக்கிறவர்களுக்கு ஒருவேளை நூல் கட்டும்போது (பைண்டிங்) இறுதிப் பக்கம் விடுபட்டுப் போனதோ என்ற தோற்றம் உண்டாகிறது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us