விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
கச்சேரி மேடைகளில் சாதாரண அங்கமாக இருந்து வந்த மிருதங்கத்துக்கு கதாநாயக அந்தஸ்து பெற்றுத் தந்தவர் மேதை பாலக்காடு டி.எஸ்.மணி ஐயர். தனக்கென்று தனியரு பாணியை அமைத்துக் கொண்டு, வாசிப்பில் சுநாதத்தைக் குழைத்துக் கொடுத்து ரசிகர்களை தன்வசப்படுத்திய ஜீனியஸ் அவர். மணி ஐயரின் வாசிப்பைக் கேட்பதற்கென்றே அரங்கில் கூட்டம் அலைமோதிய காலம் உண்டு.
சமகாலத்து முன்னணி வித்வான்கள் அத்தனை பேருக்கும் பக்க வாத்தியமாக மிருதங்கம் வாசித்திருக்கிறார் மணி ஐயர். மேடையிலும், வெளியிலும் சக கலைஞர்களுடன் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் ஏராளமானவை. வெளி உலகுக்கு அதிகம் தெரியாதவை. காரணம், சுய தம்பட்டம் தவிர்த்து வந்த அரிய கலைஞர் அவர்.
இளம் பருவத்தில் ஆரம்பித்து கடுமையாக உழைத்து, படிப்படியாக உயர்ந்து உன்னதமான இடத்தைப் பிடித்த பாலக்காடு மணி ஐயரின் வாழ்க்கையில் நடந்த பல்வேறு சம்பவங்களை சுருதி பிசகாமல் இந்த நூலில் விவரித்திருக்கிறார் சாருகேசி. தட்சிணாமூர்த்தி பிள்ளை, அரியக்குடி, செம்பை, புல்லாங்குழல் மாலி என்று அந்த நாளைய பிரபலங்களுடன் மணி ஐயருக்கு ஏற்பட்ட அனுபவங்களை சுவைபட வர்ணிக்கிறது இந்த நூல்.
கச்சேரிகளில் அன்று மணி ஐயரின் ‘தனி’யைக் கேட்டபோது ஏற்பட்ட பரவசம், இன்று இந்த நூலைப் படிக்கும்போதும் கிடைக்கும் என்பது உறுதி. வாசித்து அனுபவியுங்கள்!