நபா, தோல்பூர், அல்வார், பரத்பூர், ஐதராபாத், இந்தூர், கபுர்தலா, புதுக்கோட்டை, பரோடா, பாட்டியாலா, மைசூர், ஜெய்ப்பூர் ஆகிய இந்திய சமஸ்தானங்களின் வரலாறுகளையும், ஒவ்வொரு மகாராஜாவின் வாழ்க்கைக்குள்ளும் புதைந்து கிடக்கும் செய்திகளையும், காலனியாதிக்க காலகட்டத்தையும் குறித்து, நூலாசிரியர், குமுதம் ரிப்போர்ட்டர் வார இதழில், தொடராக எழுதியது, தற்போது, ஒரே நூலாக வெளி வந்திருக்கிறது.
‘1527ல் தோல்பூரை முகலாய பேரரசர் பாபர் கைப்பற்றினார். கிட்டத்தட்ட, 180 வருஷங்கள் தோல்பூர் முகலாயர்களிடம் இருந்தது. அப்போது தான், ஷாஜஹான், தலப் – இ – ஷாஹி ஏரியை உருவாக்கிய சமாசாரமெல்லாம் நடந்தது’ (பக்.58) ‘கொச்சின் திவானை சந்திக்க ஓர் அறிமுக கடிதத்தையும், கொச்சின் வரை தண்டவாளம் முளைக்காததால், சோரனூருக்கான ரயில் பயணச் சீட்டையும் கொடுத்து, விவேகானந்தரை வழியனுப்பி வைத்தார் சாமராஜேந்திரர்’ (பக்.879)
ஏராளமான வரலாற்றுச் செய்திகளை கொண்ட, சமஸ்தானங்களை, இந்திரா அரசு, மன்னர் மானிய ஒழிப்பின் மூலம், ‘மன்னர்களின் ஆடம்பரத்தை பறித்து விட்டோம். ஆனால், அவர்கள் மனிதர்களாக வாழ வாய்ப்பு கொடுத்திருக்கிறோம்’ (பக்.1008) என்று கூறியதும், பெரும்பாலான ராஜகுடும்பத்தினர், காங்கிரசில் அடைக்கலம் புகுந்தனர் என்பதை, நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்.
சினிமா பாடல்களை குறிப்பிட்டிருப்பதை தவிர்த்து, இன்னும் வரலாற்று தகவல்களை, ஆசிரியரால் தந்திருக்க முடியும்.
பின்னலூரான்