நூலாசிரியர் பல இடங்களிலும் ஆற்றிய சொற்பொழிவுகளை, கட்டுரைகளாக்கி தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார். ஹிந்து என்ற சொல், மதத்தைக் குறிக்கும் சொல்லன்று; அது, ஹிந்து தர்மத்தைக் குறிக்கும் சொல் என்று விளக்குகிறார். இந்து மதத்தின் அறுவகைச் சமயங்கள் பற்றி விளக்கி, பிற சமயங்களைப் புறச்சமயங்கள் என, குறிப்பிடுகிறார்.
நெருப்பு எந்த நாட்டிலும், எந்த காலத்திலும் வெப்பத்தையும், ஒளியையும் தான் தரும். அதுபோல், மாறாத இயல்பான தன்மையே ஒரு பொருளின் தர்மம் என்று அறியப்படுகிறது என்கிறார் நூலாசிரியர்.
அதுபோன்ற மாறாத இயல்பான தன்மை, மரம், நீர், மண், காற்று, உயிர்க் கூட்டங்கள் அனைத்திற்கும் உண்டு; அதுவே தர்மம். நான்கு வகை உயிரினங்கள், ஏழு வகைப் பிறப்புகள், 84 லட்சம் வேறுபாடுகள் பற்றி விளக்கியுள்ளார். பாரதக் கதைப் பகுதிகள், ரிக்வேதம், சீதை, விவேகானந்தர் கருத்துகள் போன்றவற்றை மேற்கோள் காட்டி விளக்கும் முறை நன்று. திருமந்திரம், மணிமேகலைச் செய்யுள் பகுதிகள் பொருத்தமுற விளக்கப்பெற்றுள்ளன.
பேரா.ம.நா.சந்தான கிருஷ்ணன்