பள்ளிகளில் தான், நாட்டின் எதிர்காலம் உள்ளது. ஆசிரியர்களின் தோள்களின் மீது, சிறந்த இளைஞர்களை உருவாக்கும் பொறுப்பு உள்ளது.
தேவையான உதாரண புருஷர்களை உருவாக்குவரா அல்லது எப்போதும் தேர்விற்கான தயாரிப்பிலேயே மூழ்கி விடுவரா? மதிப்பெண் வாங்கி தருவதிலேயே அவர்களுக்கு முழு மகிழ்ச்சி கிட்டுகிறதா?
இக்கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் வகையில், சிறந்த ஆசிரியர்கள் பலரின் அனுபவங்கள், கட்டுரைகளாக இந்த நூலுள் மலர்ந்துள்ளன.
சிறந்த ஆசிரியராக முன்னேற, நான்கு முக்கிய அம்சங்களைப் பின்பற்ற வேண்டும். கற்பித்தலை ஒரு தவமாகச் செய்தல் வேண்டும். தற்பெருமையும், தம்பட்டமும் வேண்டாம். தன்னடக்கப் பாசாங்கு வேண்டாம். வகுப்பறையில் அடக்குமுறை வேண்டாம்.
கற்பித்தலைச் சரியாகச் செய்து, மாணவர்களின் பொறுப்பை உணரச் செய்தால், அவர்களே ஆசிரியர்களை பீடத்தில் ஏற்றி அமர்த்தி விடுவர். அதுவே, ஜனாதிபதி பரிசை விடச் சிறந்தது. இவ்விதம் பல்வேறு சான்றுகளைக் கூறும் இந்நூல், மாணவர்களின் திறமையை, சரியான வழியில் திசைதிருப்பும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டி.
புலவர் சு.மதியழகன்