முகப்பு » வரலாறு » பல்லவர் காலச் செப்பேடுகள்

பல்லவர் காலச் செப்பேடுகள்

விலைரூ.0

ஆசிரியர் : மு.ராஜேந்திரன்

வெளியீடு: அகநி

பகுதி: வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
ஐ.ஏ.எஸ்., அதிகாரியான மு.ராஜேந்திரன், வரலாற்றின் மீது தீராத காதல் கொண்டவர். அவரது ‘பாண்டியர் செப்பேடுகள், சோழர் காலச் செப்பேடுகள், சேரர் காலச் செப்பேடுகள், வடகரை – ஒரு வம்சத்தின் வரலாறு’ ஆகிய நூல்கள், வரலாற்று ஆய்வில் புதிய தடத்தை தேடி பயணித்தவை.
அவர் எழுதி, அகநி வெளியீடாக, விரைவில், ‘பல்லவர் காலச் செப்பேடுகள்’ என்ற தலைப்பில், புதிய வரலாற்று நூல் வெளிவர உள்ளது. கி.பி., 305ம் ஆண்டில், யுவமகாராஜன் சிவஸ்கந்தர்வர்மனில் துவங்கி, கி.பி., 879ம் ஆண்டில், அபராஜிதவர்மனின் வரை, மொத்தம், 33 செப்பேடுகளை இந்த நூலில் ஆய்வு செய்துள்ளார்.
நூலில் இருந்து சில பகுதிகள்: சாருதேவியின் குணபதேயம் செப்பேடு(கி.பி.350களில்) கி.பி., 350ல் ஓர் அரசகுலப் பெண், பிராமணர் அல்லாத ஒரு விவசாயிக்கு வழங்கிய நிலதானம் பற்றிச் சொல்கிறது இச்செப்பேடு. குணபதேயம் ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம் கொண்டக்கூர் தாலுகாவில் உள்ளது. இந்த சாசனத்தை வழங்கிய சாருதேவி, பல்லவ மன்னன் யுவமகாராஜன் விஜயபுத்தவர்மனுடைய மனைவி ஆவாள்.
நூறு ஆண்டுகளுக்கு முன், சர் வால்ட்டர் எலியட் என்ற ஆங்கில ஆட்சியாளர், ஆந்திராவிலிருந்து பழைய பொருட்கள் பலவற்றை வாங்கிச் சேகரித்து வைத்திருந்தார். அந்தக் குவியலில் இந்தச் செப்பேடும் இருந்தது. பின்,  இச்செப்பேடு டாக்டர் ஹூல்ஸ், டாக்டர் ப்ளிட் என்பவர்களால் படிக்கப்பட்டு, கட்டுரைகளாக வெளிவந்தது. தற்போது இச்செப்பேடு, லண்டன் பிரிட்டிஷ் மியூசியத்தில்
உள்ளது. மூன்று ஏடுகள் கொண்டது இச்செப்பேடு. மற்ற செப்பேடுகள் போல, ஏடுகளின் இடதுபக்கம் துளையிடாமல், ஏடுகளின் நடுப்பக்கம் துளையிடப் பட்டுள்ளது. இந்த ஏடுகளை இணைக்கும் செப்புக் கம்பியும், கம்பியில் ஓர் அரசுச் சின்னமும் உள்ளது.
சின்னத்தில், நின்று கொண்டிருக்கும் காளை ஒன்று இருக்கிறது. காளையின் முதுகுக்கு மேலே தெளிவில்லாத சில உருவங்கள் உள்ளன. இவை நட்சத்திரம், சூரியனாக இருக்கலாம் என, கருதப்படுகிறது.
முதல் ஏட்டின் முன்பக்கம் மட்டும் எழுதப்பட்டுள்ளது. பின்பக்கம் எழுதப்படவில்லை. மூன்றாம் ஏட்டிலும் உட்புறம் மட்டும் எழுதப்பட்டுள்ளது. இரண்டாவது ஏட்டின் இருபுறமும் எழுதப்பட்டுள்ளன. மொத்தம் 16 வரிகள் உள்ளன. பிராகிருத மொழியிலும் சமஸ்கிருதத்திலும் எழுதப்பட்டுள்ளன. ராஜதடாகத்தின் அருகிலுள்ள குடிநீர்க் கிணற்றின் வலதுபுறம் ஆதுகன் என்பவன், பயிரிட்டு வந்த நிலத்தில், நாலு நிவர்த்தனம் பூமியை, தாலுரம் (தற்போதைய விஜயவாடா தாலுகாவில், கிருஷ்ணா நதியின் வடகரையிலுள்ள தாமலுாரு) என்ற இடத்தில் கட்டப்பட்டிருக்கும் நாராயணனுடைய கோவிலுக்கு, தனது ஆயுள், பலம் கூடுவதற்காக அளித்த செய்தியை
இச்செப்பேடு கூறுகிறது.
இந்த நிலத்திற்கு முழு வரிவிலக்கு அளிக்கப்பட்டு, அந்தத் தகவல் கடகம் (தான்யகடம்) என்ற இடத்தில் உள்ள அதிகாரி
களுக்குத் தெரியப்படுத்தப்படுகிறது. அரசர்கள் மட்டுமே நிலதானம் வழங்குவது, வரிவிலக்கு அளிப்பது அதை சாசனமாக வெளியிடுவது என்ற நடைமுறை இருந்த காலத்தில், அரசனின் மனைவி சாருதேவி இந்த அதிகாரத்தைக் கையிலெடுத்திருப்பது தெரிகிறது.
இவள் தன் இளம் வயது மகனின் சார்பாக ஆட்சி நடத்தியபோது இந்த சாசனம் வழங்கப்பட்டிருக்கும் என்றும் கருதப்படுகிறது. அரசி ஒருத்தி நிலதானம் வழங்கியதாகச் சொல்லும் நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகப் பழமையான செப்பேடு இதுவே.
அரச குல பெண்ணொருத்தியால் வழங்கப்பட்ட செப்பேடு என்பதோடு, இந்தச் செப்பேட்டிற்கு மற்றொரு முக்கியத்துவமும் இருக்கிறது. ஆம். நிலதானம் பெற்றவன் பிராமணன் அல்ல. நிலதானம் என்றாலே பிராமணர்களுக்கும் கோவில்களுக்கும்தான் என்றிருந்த காலத்தில், சாருதேவி, ஒரு சாதாரண விவசாயிக்கு இந்த நிலதானத்தை தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செப்பேடுகள்போல் ‘ஸ்வஸ்திஸ்ரீ’ என்றோ ‘ஜிதம் பாகவதா’ என்றோ மங்கலச் சொல்லுடன் ஆரம்பிக்காமல், நேரடியாக ஆணையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல பல்லவர்களின் வம்சாவளி, முன்னவர்கள் பற்றிய புகழுரைகளும்  இச்செப்பேட்டில் இல்லை. அரசியின் ஆணையை நிறைவேற்றுவது ரோகிணிகுப்தன்.
செப்பேட்டுச் செய்தி ஸித்தம் (நிறைவேற்றப்படுவதாக) ஸ்ரீவிஜயஸ்கந்தவர்மனுடைய ஆட்சியாண்டு... (எழுத்துகள் அழிந்து விட்டன)  யுவமகாராஜனும், பாரத்வாஜ கோத்திரத்தில் பிறந்தவனும், பல்லவ வம்சத்தைச் சேர்ந்தவனுமான ஸ்ரீவிஜயபுத்தவர்மனுடைய மனைவியும்... அங்குரன் என்பவனின் தாயுமான சாருதேவியின் கட்டளை இது. ...(அழிந்து விட்டது)
ராஜதடாகத்தின் அருகிலுள்ள குடிநீர்க் கிணற்றின் வடபுறம் ஆதுகன் என்பவன் இப்போது பயிரிட்டுக் கொண்டிருக்கும் நிலத்தை, தாமலுாரில் உள்ள கூளி (காளி) மகத்தரக தேவகுலத்தில், பகவான் நாராயணனுக்கு என்னுடைய (அரசி சாருதேவி) ஆயுள், வலிமை, வளர்ச்சிக்காக, நான்கு நிவர்த்தனம் அளவுள்ள நிலம் தானமாகத் தரப்படுகிறது.
இந்த விவரத்தை ஊரார்களும் அரசு அலுவலர்களான ஆயுக்தகர்களும் அறிந்து கொண்டு இந்த நிலத்திற்கு எல்லா வரிவிலக்குகளையும் தர வேண்டும். யாராவது இந்த நிலத்தைச் சொந்தம் கொண்டாடினால், அவர்களை அதிகாரிகளும் ஊராரும் அப்புறப்படுத்த வேண்டும்.
பலர் நிலதானம் செய்திருக்கின்றனர். பலர் அடுத்தவர்கள் செய்த நிலதானத்தைக் காப்பாற்றியிருக்கின்றனர். யார் யார் எந்தளவிற்கு நிலத்தை தானம் செய்தும், பிறர் செய்த தானத்தைக் காப்பாற்றியும் இருக்கின்றனரோ, அவர்களுக்கு அந்த அளவு புண்ணியம் கிடைக்கும்.
தான் கொடுத்ததோ, அடுத்தவர்கள் கொடுத்ததோ எதுவாயினும் தானம் கொடுத்த நிலத்தை அபகரித்தவன் லட்சம் பசுக்களைக் கொன்ற கொடுஞ்செயலைச் செய்தவன் ஆவன்.
அகநி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us