இந்த புத்தகத்திற்கு மதிப்புரை எழுதுவதற்கு முன், முதலில் இந்நுாலின் ஆசிரியர் க.விஜயகுமாருக்கு வாழ்த்துரையை வழங்கி விடுவோம். காவல் துறை குறித்து, இப்படி ஒரு வெளிப்படையான வாக்குமூலத்தை புத்தகமாக எழுத, மனதில் நிறைய, ‘தில்’ வேண்டும்.
அந்தளவுக்கு காவல் துறையில் ‘தில்லுமுல்லு’ செய்யும் கறுப்பு ஆடுகளை தோலுரித்து காட்டியுள்ளார். 15 ஆண்டுகளாக, ‘தினமலர்’ நாளிதழில் ‘க்ரைம் ரிப்போர்ட்டர்’ ஆக பணியாற்றிய காலகட்டங்களில், அவர் சந்தித்த சம்பவங்களே, ஒரு நிருபரின் வாக்குமூலமாக இந்த புத்தகம்.
இந்நுாலை வாசிக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே, நாமும் ஒரு க்ரைம் ரிப்போர்ட்டராக உருமாறலாம். வெளியில் நாம்பார்க்கும் காவல் துறை வேறு. உள்ளுக்குள் இயங்கும் காவல் துறை வேறு என்பதை உணரலாம். வழிப்பறி இன்ஸ்பெக்டர் என்ற முதல் கட்டுரையே நம்மை திகைக்க வைத்து விடுகிறது.
முதல் கட்டுரையை படித்த உடனே காவல் துறை என்றாலே ‘இப்படித்தான்’ என ஒரு முடிவுக்கு வந்து விடாதீர்கள்.
கண்ணப்பன், ஐ.பி.எஸ்., பொன் மாணிக்கவேல் ஐ.ஜி., போன்ற கடமை, கண்ணியம், கட்டுப்பாடுமிக்க அதிகாரிகளும் இருக்கின்றனர் என வெளியுலகம் அதிகம் அறியாத அதிகாரிகளையும் நமக்கு அடையாளம் காட்டுகிறது இந்நுால்.
போலீஸ் என்றாலே லஞ்சம், ஊழல் என, மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. காக்கிச்சட்டையின் மகத்துவம் அறியாமல், பல்வேறு தவறுகளை செய்து கொண்டிருக்கும் போலீசார் இந்நுாலை வாங்கி படித்தால் கண்டிப்பாக மனம் மாறலாம்.
கற்பனை துளியும் கலக்காமல், உண்மைச் சம்பவங்களை மட்டுமே கொண்டு படைத்துள்ளதால், ஹாலிவுட் கிரைம் சினிமாக்களையும் துாக்கி சாப்பிடுகிறது, ஒரு நிருபரின் வாக்குமூலமான இந்த ‘போலீஸ்’ புத்தகம்.
பரபரப்புக்கு பஞ்சமில்லாத இந்நுாலின் ஒவ்வொரு பக்கமும் திக்... திக்... திக்... ரகம் தான். வாங்கி படியுங்கள் உங்களுக்கும் அது புரியும்.
– எகின் பாலா