தமிழ் இலக்கியம் ஒரு காலத்தில் சங்க இலக்கியம், காப்பிய இலக்கியம், சிற்றிலக்கியம், நவீன இலக்கியம் எனப் பகுத்து ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. அந்தப் பகுப்பையும் தாண்டி, சமய இலக்கியம் என்னும் பகுப்பும் தோன்றியது.
சமய இலக்கியங்களில் ஐரோப்பியரின் வருகைக்குப் பின், கிறிஸ்துவ இலக்கியங்கள் தமிழில் தோன்றி, தமிழ் மொழிக்குப் புது மறுமலர்ச்சியைக் கொடுத்தன. காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள் என்னும் நிலையைக் கடந்து, தற்கால உரைநடை இலக்கியத்திற்குப் பெரும் பங்களிப்பை வழங்கின.
அந்தக் கிறிஸ்துவ இலக்கியங்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை முதன்மையாகக் கொண்டிருந்தாலும், தமிழ் இலக்கியத்தின் பிற தளங்களையும் உள்ளடக்கிய ஆய்வுக் கட்டுரை நுாலாக, இந்த நுால் விளங்குகிறது.
இருபத்தைந்து ஆய்வுக் கட்டுரைகளில், தமிழ் இலக்கியப் பரப்பை மேம்போக்காக ஆய்வு செய்யாமல், ஆழ்ந்து ஆய்வு செய்து அனைவருக்கும் எளிய வடிவில் தருகிறது இந்த நுால்.
தரமான வடிவமைப்புடன் வெளிவந்துள்ள இந்த நுால், பேராசிரியர் ஞானச்சந்திர ஜான்சனின் செம்மை யான பதிப்புப் பணிக்குச் சிறந்த சான்றாக விளங்குகிறது. தமிழ் இலக்கிய ஆய்வுத் தளத்தில், இந்த நுாலின் சுவடு ஆழமாகப் பதிந்து நிற்கும்.
– முகிலை இராசபாண்டியன்