இலங்கையில் தன் குடும்பத்தை விட்டு வந்து தமிழகத்தில் தங்கி வறுமை வசப்பட்டு இறுதி வரை உடலாலும், மனதாலும் நொந்து பொன எழுத்தாளர், கவிஞர் பிரமிள். அவருடன் விசிறி சாமியாரைச் சந்திக்கப்போன நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டுள்ள விருட்சம் ஆசிரியரான நுாலாசிரியர், எனக்கு மூன்று விதமான பிரமிளைத் தெரியும்.
1. நான் நேரிடையாக அறிந்த பிரமிள்
2. பத்திரிகை / புத்தகம் மூலம் அறிந்த பிரமிள்
3. பிறர் மூலம் நான் அறிந்த பிரமிள் (பக்., 66)
எனக் குறிப்பிட்டு அவருடனான நட்புறவை பல நிகழ்வுகளாகப் பகுத்து உணர்வு பூர்வமாக எழுதி உள்ளார்.
பிரமிள் கவிதைகள் ஒரு பார்வை என்ற கட்டுரையில், ‘கவிதை எழுத வாழ்வினுாடே ஓடும் தர்க்கத்தின் இழையை உணரும் திறன் வேண்டும்.
‘அதன் விளைவு தார்மீக உணர்வாகி, வீரியத்தின் உவையிர் உருகிப் பிழம்பின் நிலையை எய்திப்பின் எழுத்தில் வரவேண்டும்’ என்று கவிதையைப் பற்றிய பிரமிளின் கவிதையும் எழுத்தாளப்பட்டுள்ளது நயமாக உள்ளது.
விசிறி சாமியாரை விட அதிகமான செய்திகள் பிரமிளைப் பற்றியும், அவருடைய வாழ்வு முறை, பிற எழுத்தாளர்களுடனான முரண்பாடு, சிரமப்பட்ட சென்னை வாழ்க்கை எனச் சிற்சில சம்பவங்கள் என்றாலும் வாசகனைப் படிக்கத் துாண்டும் நுாலிது.
– பின்னலுாரான்