பள்ளிப்பட்டு தொகுதியிலிருந்து சட்டசபைக்கு இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரமுகரும், டாக்டருமான ராமன் எழுதியுள்ள வாழ்க்கை வரலாற்று நுால். அரசியல் தலைவர்கள் பலரோடும் உள்ள சிறப்பான தொடர்புகளை பதிவு செய்துள்ளார்.
செய்யும் தொழில் மருத்துவம் என்றாலும், இலக்கிய ஈடுபாடு மிக்கவர் என்பது மிக அழகாக அனுபவத்தால் வெளிப்பட்டுள்ளது. சொற்பொழிவாளராகவும், பத்திரிகையாளராகவும் பணியைச் சிறப்பாக ஆற்றியுள்ளது பற்றிய விபரங்கள் உள்ளன. ‘மாணவம்’ இதழின் ஆசிரியராக, கிருபானந்த வாரியார், டாக்டர் ரத்னவேலு சுப்பிரமணியம், கவிஞர் கண்ணதாசன் ஆகியோரைப் பேட்டி கண்டது பற்றி குறிப்பிடத்தக்க முறையில் விவரித்துள்ளார்.
‘நீரிழிவு நோயாளிக்கு, வாழ்க்கை முறை’ என்ற மருத்துவக் கட்டுரையால் மருத்தவத் தொழில் திறனை வெளிப்படுத்தியுள்ளார். பாவேந்தர் பாரதிதாசன், இசைமேதை டி.என்.ராஜரத்தினம், எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகியோருக்கு விழா எடுத்த விபரத்தை மிக பெருமிதமாக பதிவு செய்துள்ளார்.
மூத்த காங்கிரஸ் தலைவர் மூப்பனாரிடம் இருந்த பற்றை பல இடங்களிலும் குறித்து செல்கிறார். அரசியல் வாதியாகவும், பொதுவெளியில் மனித நேயம் காக்கும் பண்பாளராகவும் விளங்கியிருந்ததை இந்த நுாலில் அறிய முடிகிறது.
– ராம.குருநாதன்