பண்டைய தமிழர் வாழ்க்கை நெறிகளை அடிப்படையாகக் கொண்டு உருவான பண்பாட்டு மரபுகளில் காணப்பட்ட சமயக் கோட்பாடுகள், தெய்வங்கள் மற்றும் வழிபாடு முறைகளை விவரித்து சொல்லும் நுால்.
பழந்தமிழர் இறை வழிபாட்டில் கொண்டிருந்த நம்பிக்கை, நெறி போன்றவற்றை பத்துப்பாட்டு மற்றும் எட்டுத்தொகை பாடல் வரிகளில் காணப்படும் தகவல்களைக் கொண்டு புனைந்து பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை சார்ந்த மாந்தர் வாழ்வில் காணப்பட்ட தெய்வ வழிபாடுகள் மற்றும் இறைமைச் சிந்தனைகள் பாடல் மேற்கோள்களோடு தெளிவுற விளக்கப்பட்டுள்ளன. சமயச் சார்பின்றிப் போர்க்கள வேள்விகள், இறந்தோருக்கு நடுகல், நடுகல் விழா, திருமண விழா, நீத்தார் கடனாற்றல், சிலம்பு கழி விழா, உள்ளி விழா என மகிழ்ந்ததை அறிய முடிகிறது.
முருகனுக்கு வெறியாட்டு நிகழ்த்துதல், கட்டுவிச்சி கொண்டு குறி கேட்டல், வழிபாட்டில் பலியுணவு படையலிடுதல், நெய் விளக்கேற்றல், நெல்லும் மலரும் துாவுதல், நிமித்தங்கள், பாவை நோன்பு, உருவ வழிபாடு போன்ற வழிபாட்டு முறைகளும்; கொற்றவை, சிவன், திருமால், இந்திரன் வழிபாடுகளும் விளக்கப்பட்டுள்ளன. எண்ணற்ற வரலாற்றுத் தகவல்களை அறியச் செய்யும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு