சோழ சாம்ராஜ்யத்தின் ஆணிவேர் பற்றி எழுதப்பட்டுள்ள வரலாற்று நுால். வன்னி மரத்தின் சிறப்பு, சோழ பேரரசின் பெருமை, மூலிகைகளின் முக்கியத்துவம், கரிகாலன் பிறப்பு பற்றி எல்லாம் குறிப்பிட்டுள்ளது.
வளவன் என பெயர் சூட்டல், வளவன் கருவூருக்கு இடமாற்றல், போர்ப்பயிற்சி, வளவனின் அறிவுகூர்மை, அதிகனின் ஆட்சிப்பிடிப்பு, இரும்பிடர்த் தலையார் சிறைவைப்பு, வளவன் சிறைபிடிப்பு, வளவன் சிறையிருந்த குடிலுக்கு தீ வைப்பு.
வளவன் தீயிலிருந்து தப்புதல், வளவன் என்ற பெயர் மாற்றம் என விறுவிறுப்புடன் உள்ளது.
தீயை வென்ற தீரன், காலனை வென்ற காலன். காலனை வென்றதன் அடையாளமாய் கருப்பாய் இருக்கும் கால்களை உடையவன் என்ற பொருளில், ‘கரிகாலன்’ என்று அழைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
ஆக்கிரமித்த அரசன் அதிகனை எதிர்க்க படை உருவான விதம், காவிரியின் வரலாறு, கரிகாலனின் காதல், காவிரிபூம்பட்டின வரலாறு, கரிகாலன் திருமணம், கரிகாலனின் நீதி பரிபாலனம் போன்ற நிகழ்வுகள் மனதில் பதியும் வகையில் சொல்லப்பட்டுள்ளன.
வெண்ணிப் போரின் வெற்றி போன்ற வரலாற்று சம்பவங்களை தொகுத்து வழங்கி இருந்தாலும், கற்பனை வளம் ஆங்காங்கே சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
வெறும் வறட்சியான வரலாற்று தகவல்களை உடைய புத்தகமாக மட்டும் அமையாமல், ஒரு நவீனம் போல் அமைந்துள்ளது. இதற்கு ஆசிரியரின் கற்பனை வளம் பெருமளவில் உதவி இருக்கிறது.
வரலாற்றை சுவாரசியங்களுடன் அறிந்து கொள்ள உதவும் நுால்.
– இளங்கோவன்