குமரன் பதிப்பகம், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 80)
பணி நிமித்தமாக சொந்த கிராமத்தை விட்டு வெளியேறி சென்னையில் வசிக்கும் திலீபன் கண்ணதாசன், தன்னுடைய உணர்வுகளையே இங்கு ஒரு கவிதைத் தொகுப்பாக மலரச் செய்திருக்கிறார். அவருடைய உணர்வு தனி நபருக்கு உடையதாக அல்லாமல், கிராமத்தில் வசிக்கும் அத்தனை பேரினுடையதாக அமைந்திருக்கும் வகையில் படைத்திருப்பது நூலின் தனிச்சிறப்பு. கிராமங்களை விட்டு வெளியேரும் ஆத்மா ஒரு சபிக்கப்பட்ட ஆத்மாவாகவே உலவுகிறது என்று, தன் மனதுள் எழுந்த உணர்வுகளை புத்தகத்தில் பிரதிபலித்துள்ளார் கவிஞர்.
கிராமங்கள் தங்கள் சொந்த அடையாளங்களை இழந்த வண்ணம் உள்ளன. `பத்து பைசாவுக்கு கல் வைத்த மோதிரம்... ஐம்பது பைசாவுக்கு அழகாய் கடிகாரம்' செய்து தரும், தொலைந்து விட்ட சவ்வுமிட்டாய்க் காரனையும் அவனது பொம்மையையும் தனது கவிதை வரிகளில் தேடியிருக்கிறார் கவிஞர்.இந்நூல், கிராமங்கள் இழந்து கொண்டிருக்கும் வாசனையை மங்காமல் பாதுகாக்கும் வரலாற்றுப் பெட்டகம் போல் காட்சி அளிக்கிறது.