முகப்பு » கட்டுரைகள் » மானுட யாத்திரை

மானுட யாத்திரை

விலைரூ.60.85

ஆசிரியர் : குலோத்துங்கன்

வெளியீடு: பாரதி பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

Rating

பிடித்தவை
பாரதி பதிப்பகம், 126/108, உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை- 600 017. (பக்கம்:112 + 134.)

தமிழக மக்களுக்கு நன்கு தெரிந்த பிரபல கல்வியாளர், சிறந்த கவிஞர். இவர் படைப்புகளுக்கு சாகித்ய அகடமி உட்பட பல அமைப்புகள் பரிசுகளும், விருதுகளும் அளித்து சிறப்புச் சேர்த்துள்ளன. ஒரு கவிஞனின் அதிகபட்ச ஆவல் ஒரு காப்பியம் படைக்க வேண்டும் என்பதாகவே இருக்கும். அறிவியலும் செந்தமிழும் ஒரு சேர நன்கறிந்த கவிஞர். குலோத்துங்கன், மானுட இனத்தின் தோற்றத்திலிருந்து, அறிவியலுடன் வளர்ந்து முன்னேறியுள்ள இன்றைய கணினி யுகம் வரை ஏற்றம் பெற்றுள்ள வரலாற்றைக் காவியமாகப் புனைய முடிவு செய்து, அதை ஐந்து அங்கமாகப் பிரித்து நூல் வடிவில் மூன்றாக வடித்தெடுக்கிறார். திட்டமிட்டபடி, சமுதாயம், அரசியல் என இரண்டை முதல் பாகத்திலும், அறிவியலை இரண்டாம் பாகத்திலும் வடிவமைத்து இந்த இரண்டு பாகங்களிலும் வெளியிட்டிருக்கிறார். இனி, மூன்றாவது பாகம், ஆன்மிகம், சமயம் ஆகிய விஷயங்களை உள்ளடக்கி வெளிவரும். சமுதாயம். அரசியல் பகுதியில் மனித இனம் காட்டில் வேட்டையாடி, விலங்கெறிந்த கால முதல், கல்வியுக சமத்துவம் வரை சுருக்கமாக, முக்கியமான நிகழ்வுகள் இடம் பெற்றிருக்கின்றன. கவிதையில் கருத்துக்கள் அருவியுடன் வேகத்துடன் குதித்து இறங்கி நதியில் நிதானமாகச் செல்லும் தெள்ளிய நீர் போல அமைதியாகப் பயணம் செய்கின்றன. உதாரணமாக,"வாகனத் தேவை கண்டார், வழி பல கடந்து செல்லும் வேகமும், சுமைகள் தாங்கும் விறலும் நன்றிணைந்த தான சாதனம் இயங்கத் தக்க சக்கரம் கண்டான்' என்ற வரிகளைக் குறிப்பிடலாம். மானுடத்தின் யாத்திரையில் மனித இனம் சந்தித்த ஆட்சி, அதிகாரம் பற்றிக் குறிப்பிடுகையில், "மன்னர்கள், பகைமை கொண்ட மதகுருமார்கள், தம்முள் பின்னமாய் மேலை நாட்டில் பிரிந்தவர் பிளவு கண்டார்' என்று குறிப்பிட்டு விட்டு, "மக்கள் ஆட்சியில் பங்கு காணல் சாதிக்க இயக்கம்' என ஜனநாயகம் வேரூன்றிய சூழலை மிக அழகாக படம் பிடித்து நம் பார்வைக்கு முன் வைக்கிறார் கவிஞர். முதல் பாகத்தை, "மேலும் உயர்வெனும் சிகரம் நோக்கிச் சந்ததம் செல்வோம்; நாளை தரணி ஓர் சுவர்க்கம் அம்மா' என்ற நம்பிக்கையூட்டும் சொற்றொடருடன் முடிக்கிறார்.
இரண்டாம் பாகத்தில் "அறிவியல்' இடம் பிடித்துக் கொள்கிறது. நூற்றுக்கணக்கான அறிவியல் கண்டுபிடிப்புகளை, அதன் முக்கியத்துவத்தை, அவற்றைக் கண்டுபிடித்து அறிமுகம் செய்த அறிவியலார்களை "ஜெட்' வேகத்தில் நமக்கு அறிமுகம் செய்கிறார். ஒரு கலைக்களஞ்சியத்திற்குள் கூட அடங்க மறுக்கும் அத்துணை விஷயங்களையும், கோர்வையாக, வரிசைப்படுத்தி, அடிக்குறிப்புக்களுடன், கவிதைத் தன்மை நீர்த்துப் போய் விடாமல், மிகச் சிறப்பாகத் தகவல்களை வழங்குகிறார். ஆசிரியரின் அழகு தமிழுடன், பழகு தமிழுடன், வாசகனும் யாத்திரை செல்கிறார். கவிதை படித்த மகிழ்ச்சி; அறிவியல் தெரிந்து கொண்ட மகிழ்ச்சி. காப்பிய வரிகளிலிருந்து மேற்கோள் காட்ட முற்பட்டால், அதுவே ஒரு நூலாக விரிவடைந்துவிடும். பாரதி பதிப்பகத்தார் நூலை மிகச் சிறப்பாக கட்டமைப்பு செய்துள்ளனர். பாராட்டுக்குரிய பணி. முதல் பாகத்திற்கு, முனைவர் இந்திரா பார்த்தசாரதி அணிந்துரை வழங்கியிருக்கிறார். இரண்டாம் பாகத்திற்கு ஊரன் அடிகள் அணிந்துரை வழங்கி காப்பியத்திற்குச் சிறப்புச் சேர்த்திருக்கிறார். நூலாசிரியரும், காப்பியக் கவிஞருமான குலோத்துங்கன் (வா.செ.குழந்தைசாமி) தமிழில் காப்பியம் எழுதிய தமிழ்க் கவிஞர்களின் பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொண்டு விட்டார். அறிவியல் அறிஞரின் அற்புதமான காப்பியத் தமிழ்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us