கனவு கண்டேன் தோழி :நூலாசிரியர்: எஸ். ஸ்ரீதுரை. வெளியீடு: வரம், 33/15, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை-18. (பக்கம்: 136).
திரு மாலை சூட்டி திருமாலை ஏற்றவள் ஆண்டாள். திருவில்லிப்புத்தூரில் ஒரு திருப்பம் நிகழ்ந்தது. பூமாலையைத் தான் சூடி, பெருமாளை ஏற்க வைத்தாள். பாமாலையைத் தான் புனைந்து "திருப்பாவை'யை ஏற்க வைத்தாள்.மார்கழி அதிகாலை குளிரில் பாடிப் பரவசப்படும் 30 ஆண்டாள் பாசுரங்களுக்கும், சுடச் சுட நெய் ஒழுகும் பொங்கலாக இந்த நூலில் விளக்கம் தரப்பட்டுள்ளது.ஸ்ரீவைஷ்ணவ பாணியிலும், மணிப்பிரவாளத்திலும், இலக்கிய நோக்கிலும் "திருப்பாவை'க்கு பற்பல உரை விளக்கங்கள் வந்துள்ளன. ஆனால், இந்த "ஜனரஞ்சக உரை'யில் காலத்திற்கு ஏற்ப புதுமணம் கமழ்கிறது. சுடர்க்கொடி ஆண்டாளுக்குச் "சுடிதார் போட்டு' அழகு பார்க்கிறது! சினிமா, அரசியல், சந்தடிகளை ஒப்புமை கூறி, சந்தமிகு "திருப்பாவை' ஒரு சிறுகதை போல சொற்சித்திரமாய் வரையப்பட்டுள்ளது.சயாம் நாட்டில் "த்ரியெம்பாவத்ரிபாவ' என்ற பெயரிலும், கர்நாடக, ஆந்திர மாநிலங்களிலும் திருப்பாவை வழிபாடு உள்ளதை ஆய்வு நோக்கில் கூறியுள்ளார் ஆசிரியர். "காத்யாயினி' என்ற துர்க்கை விரதமே பாவை நோன்பு என்ற பழந்தமிழ் இலக்கியமான பரிபாடலின் கருத்தை இவரும் ஏற்றுப் போற்றியுள்ளார்.மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில் முதல் பாடல் தொடங்கி, வங்கக் கடல் கடைந்த மாதவனை, கேசவனை வாழ்த்தும் 30ம் பாடல் வரை, பாடலின் கருத்தை சிறு விளக்கமாகவும், அதற்கான சுவை விளக்கத்தை விரிவாகவும் எழுதிய பாங்கு பாராட்டுக்குரியது.இதோ அற்புதமான சில விளக்கங்கள். பெண்கள் கூந்தலுக்கு வாசமுண்டு எனக் கேட்ட தருமி பாடலுக்கு நக்கீரர் மறுப்பு சொன்னாரே; அவருக்கு சான்றாக "கந்தம் கமழும் குழலி' (பாடல்-18) என்ற ஆண்டாள் பாடல் கிடைத்திருந்தால், கூந்தலுக்கு வாசமுண்டு என்று பரிசு கிடைத்திருக்கும் (பக்கம்-75). கிரிக்கெட் வர்ணனையில் 15ம் பாடல் மிளிர்கிறது.
ஒரு சினிமா தயாரிப்பு போல, இந்த நூலை பலர் பொறுப்பு ஏற்று திட்டமிட்டு சிறப்பாக வெளியிட்டுள்ளனர். அழகாகத் தான் உள்ளது. ஆனால் ஏன் எழுத்துப் பிழை தலைகாட்டுகிறது?