மகாகவி பாரதியின் புகழை உலகறியச் செய்தவர்களுள் மிக முக்கியமானவர், கம்யூனிஸ்ட் தலைவர்களுள் ஒருவரான ஜீவானந்தம்.
பாரதி பாடல்களைத் தனி உடைமையாக இல்லாமல், நாட்டின் பொதுவுடைமையாக்க வேண்டும் என்று, ஜீவா குரல் கொடுத்ததால் தான், நாடக மேதை டி.கே.சண்முகம் பெருமுயற்சியில், பெருந்தலைவர் காமராஜர், அப்போதைய தமிழக முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆகியோர் ஆதரவில், பாரதி பாடல்களுக்கு விடுதலை கிடைத்தது.
இதுபற்றிய விவரமான செய்திகளுடன், பாரதி பற்றி நுட்பமான ஆராய்ச்சிக் கட்டுரைகளாக, ௩௭ தலைப்புகளில் ஜீவா, ‘தாமரை, ஜனசக்தி’ ஏடுகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் உருப்பெற்றுள்ளது. ஒவ்வொரு கட்டுரையும், பாரதியை உலகளாவிய ஒப்பீடுகளுடன், கம்பீரமாக நம் மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்தி, பிரமிக்க செய்கிறது. பாரதி அன்பர்கள் தவற விடக்கூடாத பொக்கிஷம் இந்த நூல்.
– கவுதம நீலாம்பரன்