நூலாசிரியர் சண்முகநாதன், முன்பு தமிழக ஆர்.எஸ்.எஸ்.,சின் மாநில அமைப்பாளராக இருந்தவர். தற்போது, பா.ஜ.,வின் அகில இந்திய தலைவர்களில் ஒருவர். நான்கு பகுதிகளாக உள்ள இந்த நூலின் முதல் பகுதி, பா.ஜ., எப்படி ஒரு அரசியல் இயக்கம் என்பதையும், 2ம் பகுதி, அதன் நாடாளுமன்ற செயல்பாடுகள் பற்றியும், 3ம் பகுதி, தேசத்தின் சமூக, கலாசார பின்னணி குறித்தும், 4ம் பகுதி, ஆன்மிக பின்னணியையும் கூறுகிறது.
சத்தீஸ்கர் மாநில பா.ஜ., தலைவரான நந்தகுமார் சாய், கட்சி வேலையாக, பழங்குடியினர் அதிகமாக உள்ள பகுதிக்கு சென்றார். அவர்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி இருப்பதை கண்டு, அதை நிறுத்தும்படி சொன்னார். அதற்கு அவர்கள், ‘நீங்கள் உப்பு சாப்பிடுவதை போல், எங்களுக்கு மது. நீ உப்பை நிறுத்திக் காட்டு; நாங்கள் குடியை விட்டு விடுகிறோம்’ என்றனர். நந்தகுமார் சாய் அன்று முதல், இன்று வரை உப்பில்லாமல் தான் சாப்பிடுகிறார். கேள்விப்பட்ட அந்த மக்கள் குடியை நிறுத்திவிட்டனர்.
இவ்வாறு, சமுதாயத்துடன் பழகி, அதற்கு முன்னுதாரணமாக இன்றும் வாழ்ந்து வரும் தலைவர்களை கொண்ட அரசியல் இயக்கம் பா.ஜ., என்பதை, உதாரணங்களுடன் சுட்டிக்காட்டி உள்ளார். பிரதமர் மோடி, பகவத் கீதையை பரிசளிப்பதும், மத்திய அமைச்சர்கள், பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று கூறுவதும், சர்ச்சைக்குள்ளாகியது. இந்த நிலையில், 2011ல் ரஷ்யாவில், பகவத் கீதையை தடை செய்ய வேண்டும் என, ரஷ்ய பழமைவாத சர்ச் வழக்கு தொடர்ந்தது.
அது தொடர்பாக, நாடாளுமன்ற விவாதத்தில், லாலு பிரசாத் யாதவ், ‘‘கீதையை அவமதிப்பது பகவான் ஸ்ரீகிருஷ்ணரையே அவமதிப்பதாகும்,’’ என்றார்.
முலாயம் சிங் யாதவ், ‘‘உலகம் முழுவதும் ஏற்றுக் கொண்ட பொது நூல் கீதை. காந்திக்கு மிகவும் பிடித்தமான நூல். அதன் அடிப்படையிலேயே இந்தியாவை கட்டமைக்க காந்தி விரும்பினார். ஆனால், காங்கிரஸ் அரசு அதை ஏற்று தீவிரமாக மக்களிடையே பிரபலப்படுத்தவும், பிரசாரம் செய்யவும் தவறிவிட்டது,’’ என்று குற்றம் சாட்டினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், கீதையை ஆரம்ப பள்ளியிலேயே சொல்லித்தர வேண்டும் என்று வலியுறுத்தினர். இன்று கீதை பற்றி, அமைச்சர்களின் பேச்சை எதிர்க்கும் பல தலைவர்களின் பிற்போக்கு அரசியலை அம்பலப்படுத்துகிறது, இந்த நூலில் உள்ள ஒரு கட்டுரை.
திருநின்றவூர் ரவிக்குமார்