முகப்பு » தமிழ்மொழி » வழிகாட்டும் வள்ளுவம்

வழிகாட்டும் வள்ளுவம்

விலைரூ.170

ஆசிரியர் : நிர்மலா மோகன்

வெளியீடு: வானதி பதிப்பகம்

பகுதி: தமிழ்மொழி

ISBN எண்: -

Rating

பிடித்தவை
வாழ்வதற்காக வள்ளுவம்! புகழ்வதற்கு அல்ல! ‘திருவள்ளுவரை வழிபட்டு தெய்வம் ஆக்கிவிடாதீர்கள். அவர் தெய்வப் புலவர் தான்! ஆனாலும், அவர் தந்த திருக்குறளை வழிகாட்டி நூலாகக் கொண்டு வாழ்ந்து காட்டுங்கள்’ என்பதே, பேராசிரியர்கள் மோகன், நிர்மலா இருவரும் இந்த  வள்ளுவர் நூலின் வழி சொல்கின்ற தீர்ப்பு.
இரட்டை நாதஸ்வரம் வாசித்தால் கேட்டுக் கிறங்கிப் போவதைப் போல், தமிழறிஞராயும், பேராசிரியப் பெருந்தம்பதியராயும், சிரிக்க, சிந்திக்கப் பேசும் மோகன், நிர்மலா, ‘வள்ளுவம்’ நூலின் வழி ஒரு சிந்தனைக் கச்சேரி நடத்தியுள்ளனர். இவர் வழங்கியுள்ள இந்நூல் நாம் வாசிக்க வேண்டிய அற்புதச் சிந்தனைப் பேழை.
‘அறன் எனப்பட்டதே வாழ்க்கை’ என்று கூறிய வள்ளுவத்தை தம் இல்வாழ்க்கையில் இனிதே பின்பற்றும் இந்த இணையர், இருவரும் ஒரே குரலில் பேசுகின்றனர். திருவள்ளுவர், தவ வாழ்வை விடவும் இல்வாழ்வையே உயர்த்திப் பேசுகிறார் என்று அழுத்திக் கூறுகின்றனர். ‘தவ வாழ்க்கைக்கும், துறவு நெறிக்கும் மேலான ஒன்றாக இல்வாழ்க்கையை வைப்பது வள்ளுவரது உடன்பாட்டுச் சிந்தனையின் மணிமுடி ஆகும்.’ (பக். 14).
முப்பாலை இவர்களும், ஒப்பியல், உரையியல், நோக்கியல் என்று முப்பிரிவு ஆக்கிக் கொண்டு, 20 தலைப்புகளில் சிந்தனைகளை விதைத்துள்ளனர்.
பரிமேலழகர், மணக்குடவர் முதலான, 10 பழம் உரையாசிரியர்களுக்கு ஓய்வு அளித்துள்ளனர். வ.உ.சி., திரு.வி.க., நாமக்கல் கவிஞர், பாவேந்தர், பாவாணர் தமிழண்ணல், சிற்பி முதலான புதிய எட்டு உரைகளுடன் ஆக்கப்பூர்வமான பல சிந்தனைகளை வள்ளுவரிடமிருந்து நமக்கு வழங்குவது பாராட்டத்தக்க புது முயற்சி. நம்பிக்கையும், உடன்பாட்டுச் சிந்தனையும் நூலின் வழி வெளிவந்துள்ளது.
ஆல்பர்ட் சுவைட்சர் கூறியது போல, ‘திருவள்ளுவரை ஓர் உடன்பாட்டுச் சிந்தனையாளராக அடையாளம் காட்டுகிறார். உலகச் சிந்தனையாளர்கள் ரோமானிய மார்க்ஸ் அரேலியஸ், சீனக் கன்பூசியஸ், இந்திய மனு, இவர்களுடன் திருவள்ளுவரை பலமுறை ஒப்பிடப்பட்டு பல நூல்கள் வந்துள்ளன. ஆனாலும், சர்வக்ஞருடன் வள்ளுவரை இணைத்துள்ளது புது முயற்சியே.
நோக்கியல் தலைப்பில் அகநிலை ஆய்வில், ‘ஊடல் சித்தரிப்பில் தூய்மையும் புரட்சியும்’ (பக். 188) மிக விரிவாக காட்டிய நயம், உணர்ந்து எழுதப்பட்டுள்ளது. காம இன்பத்தை, கடவுள் இன்பத்தோடு பேரின்பத்தோடு காட்டும் அறிஞர் தொ.பொ.மீ., கருத்து இங்கே முத்தியை பதித்து நிற்கிறது (பக். 192).
வள்ளுவர் காட்டும் இறைநிலையில், யார் கடவுள்? ஆதி பகவனா? வாலறிவனா? அறிவாழி அந்தணனா? என்று எட்டுக்கும் மேலான வினாக்களை எழுப்பி, ‘பொதுநிலையில் இறையைப் பண்புகளையே’ திருவள்ளுவர் காட்டியுள்ளார் என்று விடை கூறுகிறார். முதலாவது கடவுளில் துவங்கி, முடிவில் ‘ஊழ்’ விதியை ஆய்வு செய்து, ‘ஊழையும் உப்பக்கம் காணும் வழிமுறையுடன்’ நூலை நிறைவு செய்கின்றனர்.
வள்ளுவத்தை புதுமணத் தம்பதியரின் உற்சாகத்தில், இனிமையுற எழுதியுள்ள சிந்தனை நூல் இது.
முனைவர் மா.கி.ரமணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us