‘மெட்ராஸ்காரர்கள் அயோக்கியர்கள் போலவும், அவர்கள் பேசும் மொழி கொச்சையானது என்றும், இந்த நகரத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் பேசுவது இந்த மண்ணின் பூர்வக்குடிகளை கேலி செய்வதாகும். எங்கெங்கிருந்தோ இந்த கிராமத்துக்கு வந்து சேர்ந்த, 90 சதவீதம் பேர் செய்யும் தவறுகளை, மெட்ராஸ் மக்கள் சுமக்கின்றனர்’ என, சித்திரை வெயிலாய் வறுத்தெடுக்கிறார், சென்னைவாசியான தமிழ்மகன்.
தமிழன் பெயரோடு, ‘துரை’ சேர்ந்த வரலாற்றிற்கு, வள்ளிமலை சுவாமிகளே காரணமாம். ஆம்... ஆங்கில புத்தாண்டில், தமிழர்கள், வெள்ளையரிடம், யாசகம் கேட்பதை நிறுத்த யோசித்தார். ‘துரைகளுக்கெல்லாம் பெரிய துரையான துரைமுருகன் இருக்கும் இடத்துக்கு வாருங்கள்... இனி ஒவ்வொரு ஆங்கிலப் புத்தாண்டு அன்றும் திருத்தணியில் படி உற்சவம் நடக்கட்டும்’ என்றாராம்.
இப்படியாக, சென்னையில் காணாமல் போன ஸ்டூடியோக்கள், திரையரங்குகள், குதிரை ரேஸ், மிருகக்காட்சி சாலை, மூர்மார்க்கெட், டிராம் வண்டி உள்ளிட்டவற்றையும், அவற்றுடன் தனக்கான அனுபவங்களையும் விவரிக்கிறார்.
‘மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்’ நூல், காலச் சக்கரத்தில் நம்மை ஏற்றி, 50 ஆண்டுகளுக்கு முன் நிறுத்துகிறது.
– நடுவூர் சிவா