சங்க காலத்திலிருந்து, தற்போதைய காலம் வரை தோன்றிய பல இலக்கியங்களைப் பற்றிய ஆழமான ஆய்வு நூலாக இந்நூல் விளங்குகிறது. இந்நூலில் ஏழு கட்டுரைகள் உள்ளன. இடைக்காலத்தில் மன்னராட்சி முறையும், நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பும் இருந்ததாகவும், அக்காலத்தில் தீண்டாமை உச்சக்கட்டமாக இருந்திருக்கிறது என்றும் (பக்.2), முகலாயர் காலத்திலும் இலக்கியம் ஆள்வோரைப் பற்றியதாகவே அமைந்துள்ளது என்றும் (பக்.3), ஐரோப்பியர் வருகைக்குப் பின் இந்தியப் பொருளாதார – அரசியல் அமைப்பு அவர்கள் நாட்டுத் தாக்கம் பெற்றது என்றும் (பக்.3), அச்சு இயந்திரங்களின் தோற்றம், வளர்ச்சி, எழுது பொருள் மாற்றம், உலக அளவிலான கருத்துப் பரிமாற்றம் ஆகியவை இலக்கியத்தின் வகை, வடிவம், உள்ளடக்கத்தில் வேகமான மாற்றங்களை ஏற்படுத்தின என்றும் (பக்.3) இந்நூல் தெரிவிக்கிறது.
‘படைப்பாளரும் படைப்பழகியலும்’ என்னும் கட்டுரையில், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, சு.சமுத்திரம், தி.க.சிவசங்கரன், கு.சின்னப்ப பாரதி, சுந்தர ராமசாமி மற்றும் பலரின் வாழ்க்கை வரலாற்றுடன் அவர்கள் எழுத்தின் விமர்சனம் படிக்க மிகவும் சுவையாக உள்ளன.
மூன்றாம் கட்டுரையில், ‘தாய்’ நாவலும், நான்காம் கட்டுரையில், தென்னிந்திய மீனவர் பண்பாடும், ஐந்தாம் கட்டுரையில் தி.ஜானகிராமன் படைப்புகளும்
விளக்கப்படுகின்றன. நூல் முழுவதும், நூலாசிரியரின் சிறந்த ஆய்வு நோக்கம் தெரிகிறது. நல்ல பயனுள்ள நூல்.
– டாக்டர் கலியன்சம்பத்து