திருக்குறள் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு, பலராலும் உரை எழுதப்பட்டு மேலும் அணி சேர்க்கும் வகையில் வெளிவந்துள்ள நுால். ‘வாலறிவன்’ என்ற சொல்லுக்கு, மெய்யறிவை உடைய இறைவன் என பொருள் கூறுகிறது. ‘மலர்மிசை ஏகினான்’ என்ற சொல்லிற்கு, மலர் போன்ற நெஞ்சகத்தில் குடியேறும் இறைவன் என்று பொருள் தருகிறது.
‘இறைவன் அடி’ என்ற சொல்லிற்கு, இறைவனது திருவடி என்ற படகு என விரிவான விளக்கம் தருகிறது. ‘கரி’ என்ற சொல்லிற்கு, சான்று என்று பொருள் கூறுகிறது. ‘அந்தணர் என்போர்’ என்ற சொல்லிற்கு, ‘அறவோராகிய துறவோர்’ என்று விளக்கம் தருகிறது. ‘ஆகூழால் தோன்றுவது’ முயற்சி உண்டாகும் என்றும், ‘போகூழால் தோன்றுவது’ முயற்சியின்மையை உண்டாக்கும் என்றும் விரிவாக விளக்குகிறது.
‘கற்ற பின் நிற்க’ என்ற சொல்லை, கற்ற பின் அக்கல்விக்கு ஏற்றவாறு சொல்லும் நெறிப்படி என்று விளக்கம் தருகிறது. ‘அவியுணவின் ஆன்றோர்’ என்ற சொல்லிற்கு, தேவர்கள் என்று உரை கூறுவதும் அறிவாற்றலுக்கு எடுத்துக்காட்டுகள். திருக்குறளுக்கு பொருள் செறிந்த உரையாக விளங்குவதால் படித்து பயன் பெறலாம்.
–
டாக்டர் கலியன் சம்பத்து