சிந்தையள்ளும் கட்டுரைகள்! ‘அம்மாக்களும், அடையாளச் சிக்கலும்!’ என்ற முதல் கட்டுரையில் ஆசிரியர் சொல்வார்; ‘குழந்தைகள் அழகானவை. பூக்களை போன்றவை. எல்லா உயரிய விஷயங்களைப் போல அவையும் தீவிர கவனத்தைக் கோருபவை.
‘அந்தப் பராமரிப்பின் சுமையை ஏற்க ஆழ்ந்த காதலும், பொறுமையும், புரிந்துணர்வும் வேண்டும். அதற்கு தயாரில்லை எனில் நிகழும் வன்முறைகளைத் தடுக்கவே முடியாது!’
தமிழ் சினிமா: கோடுகளை அழிக்கும் ரப்பர்! என்ற கட்டுரையில் பேசுவார்; ‘‘பொறுக்கித்தனத்தில் ஒரு தீவிர எம்.ஜி.ஆர்., ரசிகனும், அஜித் ரசிகனும் ஒன்று தான்.
படம் வெளியான அன்றே அந்தப் படத்தைப் பார்த்து விடுவது, மீண்டும் மீண்டும் பார்ப்பது, ரசிகர் மன்றங்கள் அமைத்துக் கொண்டு கொடிகட்டுவது, ஊர்வலம் செல்வது, நடை உடைகளில் தன் பிரத்யேக நடிகனின் பாவனைகளை வெளிப்படுத்துவது.
போட்டி நாயகனின் குணங்களை கிண்டல் செய்யும் உடல் மொழியே வெளிப்படுத்தி அந்த நாயகனை விரும்பும் மற்ற ரசிகர்களைச் சீண்டுவது என்பதாக இதன் குணங்கள் தம்மை வெளிப்படுத்திக் கொண்டன.
(பக்.76) டாஸ்மாக் பற்றி ஆசிரியர் சொல்வதும் சிந்திக்கத்தக்கது. காரசாரமான சமூக விமர்சனம், ‘விலகி நடக்கும் சொற்கள்’ காட்டும் பாதை.
– எஸ்.குரு