தீபாவளியை நாம் கொண்டாடுகிறோம். புதிய உடை, பட்டாசு, இனிப்பு வகைகளுடன் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடுகிறோம். இந்தத் தீபாவளி என்னும் பண்டிகைக்குள் இத்தனை கதைகளா? என்று மூக்கின் மேல் விரல் வைத்து வியக்கச் செய்திருக்கிறது இந்த நூல்.
ஒவ்வொரு கதைக்குள்ளும் ஒளிந்திருக்கும் உண்மைகளும், அந்தக் கதைகளின் புனைவும், தமிழ்க் கதை வளர்ச்சிக் காலத்தை மிகவும் பின்னுக்குக் கொண்டு சென்று, தமிழ் இலக்கிய வளத்திற்கு வளம் சேர்க்கின்றன.
பரம்பொருள் பற்றிய செய்திகளையும், நுட்பங்களையும் திரட்டி, நம்முடன் இந்த நூலில் எடுத்துப் பேசுகிறார் டாக்டர் சுதா சேஷய்யன். சைவ, வைணவச் சண்டையைப் போக்குவதற்குச் சங்கர நாராயணனை வரவழைக்க, சங்கரன் கோவிலில் தவம் செய்தவள் கோமதி.
உலக மக்கள் அமைதியாக வாழ்வதற்காகத் திருநெல்வேலியில் கம்பை நதிக் கரையில், 32 அறங்களைச் செய்து தவம் செய்தாள் காந்திமதி. ஹிரண்யாட்சனும், ஹிரண்ய கசிபும் அண்ணன், தம்பியர் என்பதும், திருமாலை ஹிரண்ய கசிபு எதிர்ப்பதற்குக் காரணம், தன் அண்ணனை அவர் கொன்றது தான் என்பதும், முதலான பல நுணுக்கச் செய்திகள் இந்த நூலில் விதைக்கப்பட்டுள்ளன.
பேசும் பரம்பொருள் என்னும் இந்த நூலைப் படித்தால் ஆன்மிகப் பயிரும், அறிவுப் பயிரும் நம் மனதில் செழித்து வளரும். ராவணன், மகிஷாசுரன், சூரன், பத்மாசுரன், சாகிலன் முதலான அசுரர்களின் அழிவுக்குக் காரணம் ஆணவம். இந்தக் கதைகளிலிருந்து ஆணவம் இல்லாமல் நாம் வாழ வேண்டும் என்னும் எண்ணம் நமக்குத் தோன்றினால் அது, இந்த நூலின் வெற்றி.
அன்பு, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பண்பு, அறம் முதலான அனைத்து வாழ்வியல் நெறிகளையும் திருக்குறள் போதிப்பதைப் போல், சிறந்த வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் இந்த நூல் போதிக்கிறது. மொத்தத்தில் இந்த நூல், உடல் நலம் பேணும் மருத்துவரால் படைக்கப்பட்ட மனநலம் பேசும் நூல்.
– முகிலை ராசபாண்டியன்