முகப்பு » கட்டுரைகள் » காப்பியங்கள் அணிந்த காலணிகள்

காப்பியங்கள் அணிந்த காலணிகள்

விலைரூ.50

ஆசிரியர் : தாமல் கோ.சரவணன்

வெளியீடு: கோமல் பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
கம்பராமாயணத்தில் இடம்பெறும் பாதுகை, சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் காற்சிலம்பு ஆகிய இரண்டையும் பற்றிய இந்த நூல், பல விவாதங்களை முன்னிறுத்தி எழுதப்பட்டுள்ளது. ராமாயணத்தில் பாதுகை பற்றிய இடங்களை நுட்பமாக ஆராய்ந்து, அதை எந்தெந்த கோணங்களில் வெளிப்படுத்த முடியும் என்பதை தடைவிடைகளோடு ஆழமாகச் சிந்தித்துள்ளார் ஆசிரியர்.
பரதன் பாதுகையை ராமனிடத்திருந்து பெற்றமை பற்றி நுணுக்கமாக ஆராயும் நூலாசிரியர், பாதுகையும், காற்சிலம்பும் என்ற முதல் கட்டுரையில், ‘பாதுகை என்ற காலணி மனிதனாய்  பிறந்து தெய்வத்திற்கு உரியது.
‘சிலம்பு என்ற காலணி மனிதராய் பிறந்து  தெய்வமானவளுக்கு உரியது’ என்ற கருத்துப்பட எழுதுகிறார். ‘இரு காலணிகளும் தங்களுக்குரியவர்களை விட்டுப் பிரியும் போதுதான் முக்கியம் வாய்ந்தவைகளாக உருவெடுக்கின்றன. ராமனின் பாதுகை அவன் கால்களை துறந்து, பரதனின் தலையை  அடையும் போதுதான் முக்கியத்துவம் பெறுகிறது.
‘அதேபோல, கண்ணகியின்  காற்சிலம்பு அவள் கால்களை துறந்து, கோவலனின் கைகளுக்கு சென்ற பின்தான் முக்கியத்துவம் பெறுகிறது’ என்ற ஒப்பீட்டு சிந்தனை போற்றும்படி உள்ளது.
கல்லாக  இருந்த அகலிகை, ராமனின் கால்பட்டு புத்துயிர் பெற்றாள் என்பதைப் புதிய  கோணத்தில் சிந்திக்கிறார் ஆசிரியர். ராமனின் திருவடியை தொட்டு சிதறிய சிறு  துளிகளின் நிழல், கல்லின் மீது விழுந்த மாத்திரத்திலேயே அகலிகை சாபம்  நீங்கி உயிர் பெறுகிறாள் என்றுரைக்கிறார்.
ராமனின் பாதமல்ல, அவர் பாதத்தை  பற்றியிருக்கும் பாதுகை, அகலிகையின் சாபத்தை போக்கும் ஆற்றலை அந்தச் சிறு  துகளுக்கு கொடுத்துள்ளது என்று முடிந்த முடிபாகக் கூறும் கருத்து  வரவேற்புக்குரியது.
ராமனின் பாதுகையிலிருந்து எழுந்த துகளே சாபத்தை  நீக்கியதெனில், தாம் கொண்ட பழி பாவங்கள் நீங்கி, தம்மைத் தூய்மையடையச்  செய்யாதா என்ற ஏக்கத்தால், பரதன், ராமன் பாதுகையை தலையில் வைத்துக்  கொண்டான் போலும் என்ற கருத்து, ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடு.
பாதுகை,  பரதனின் தவக்கோலத்தை மேற்கொள்ள ஒரு குறீயிடாக இருந்துள்ளது என்ற  எண்ணவோட்டமும் எண்ணி பார்க்கக் கூடியதாக உள்ளது. ஆசிரியர், இதை மேலும்  விரித்துரைக்க இடமுண்டு.
கோவலன், ஒற்றை சிலம்பை எடுத்துச் சென்று  விற்க முனைந்ததை ஆழமாக சிந்திக்கும் ஆசிரியர், தக்க விவாதத்தை எழுப்பி,  அதற்கான விடையையும் கூறியுள்ளார். ‘சிலம்புள கொண்ம்’ என்று சொல்லிய  கண்ணகியின் சொற்கள், ‘கோவலனின் செயலை இகழ்ந்து காட்ட அவள் செய்த மறைமுகமான  செயல் அது’ என்று சுட்டியிருப்பது ஆழ்ந்த சிந்தனை.
பொற்கொல்லன் பற்றி  ஆழ்ந்துரைக்கும் கட்டுரையாசிரியர், ‘இளங்கோவடிகள் கோவலனை பொய்யான  குற்றத்திற்காக மாண்டு போக வைப்பதில் கவனம் செலுத்தினாரே ஒழிய, உண்மை  குற்றவாளியை விரித்துச் சொல்லி விளங்க வைக்க முக்கியத்துவம் காட்டவில்லை  என்று தெரிகிறது’ என்று சிந்தித்துள்ளமை, விவாதங்களுக்கு இடம் தரும்  வகையில் அமைந்துள்ளது.
ராமாயண, சிலப்பதிகார ஆய்வாளர்கள் மேலும் மேலும்  சிந்திக்கும்படியான தகவலை கொண்டிருக்கும் இச்சிறிய நூல், சீரிய  கருத்துக்களை கொண்டுள்ள நூல் என்பதில் ஐயமில்லை.
ராம.குருநாதன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us